வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் போலீசார் பெருங்களத்தூர் சோதனை சாவடியில் பா.ம.க நிர்வாகிகளை அனுமதிக்காததால் கோபத்தில் பா.ம.க தொண்டர்கள் ரயில் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை:
வன்னியர் சமுதாய மக்களுக்கு தமிழக அரசு வேலையில் 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து சென்னை தமிழ்நாடு தேர்வாணையம் முன்பு இன்று போராட்டம் நடைபெறும் என பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து பா.ம.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வந்தனர்.அவர்களை பெருங்களத்தூர் சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி பா.ம.கவை சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் மட்டுமே சென்னைக்குள் செல்ல அனுமதியளித்தனர்.மீதமுள்ள பா.ம.க தொண்டர்களை போலீசார் திருப்பி அனுப்ப முற்பட்டனர்.
சென்னைக்குள் எங்களையும் அனுமதிக்க வேண்டுமென்று திடீரென பா.ம.க கட்சி தொண்டர்கள் பெருங்களத்தூர் நெடுச்சாலையின் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட தொடங்கினர்.மேலும் அருகில் இருந்த ரயில் தடங்களில் இறங்கி ரயில் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட அவர்களை தடுக்கமுடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.