சென்னை அடுத்த வண்டலூர் அருகே பாஜகவில் இணைவதற்காகக் கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வந்த ஆறு ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓட்டேரி விரிவு பகுதியில் கொரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி பாஜக சார்பில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மளிகை சாமான் உள்ளிட்ட நிவாரணம் பொருட்கள் வழங்கபட்டது.
அப்போது, அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்தத சிலரைப் போலீசார் அழைத்து அவர்களின் வாகனத்தைச் சோதனை செய்தனர். அப்போது கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் வந்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, அவர்கள் அனைவரையும் ஓட்டேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை செய்தனர்.

அதில், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நெடுங்குன்றம் சூர்யாவின் கூட்டாளிகள் என்பது தெரிய வந்தது. ரவுடி சூரியா தப்பிவிட மற்றவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர். அவர்கள் போலிசாரிடம், “நாங்கள் பாஜக கட்சியில் சேர வந்தோம். ஆனால், அப்பகுதியில் போலீசார் இருந்ததால் பயத்தினால் அங்கு செல்லவில்லை” என்று கூறியுள்ளனர். போலிசாரிடம் சிக்கிய ஆறு ரவுடிகள் மீதும் ஏதாவது வழக்குகள் பதியப்பட்டுள்ளதா என்று அருகிலுள்ள காவல் நிலையங்களில் விசாரித்து வருகின்றனர் ஓட்டேரி போலீசார்.
இதனிடையே, பாஜக-வில் இணைய வந்தவர்களைக் போலீசார் கைது செய்ததையொட்டி ஓட்டேரி காவல் நிலையத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் திரண்டனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கல்வெட்டு ராஜு எனும் பிரபல ரவுடியும் தனது கூட்டாளிகளுடன் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.




