11- ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை வரும் 24-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, சரோஜா, கருப்பண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில், நல்ல மழை பெய்து வருவதால் தமிழகத்திலுள்ள அனைத்து அணைகளும் நிரம்பி உள்ளதாகத் தெரிவித்தார். இதனால், விவசாயிகளின் மனம் குளிரும் வகையில் பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.
முதலமைச்சரின் உத்தரவின்படி, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்த செங்கோட்டையன், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை வரும் 24-ஆம் தேதி முதல் நடைபெறும் என கூறினார்.