நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகில் உள்ள மட்டக்கண்டியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், ஊட்டி தூனேரியை சேர்ந்த இளம பெண் ஒருவருக்கும் கடந்த வாரம் மணமகன் இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திருமண நிகழ்ச்சியில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
மணமக்களின் குல வழக்கப்படி தாலி கட்டுவதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என 3 முறை மணமகன் மணமகளிடம் கேட்க வேண்டும். அப்படி 2 முறை மணமகன் கேட்டபோது மணமகள் பதில் ஏதும் கூறவில்லை. 3-வது முறை அவ்வாறு கேட்டபடி மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்ட முயன்றார்.
அப்போது திடீரென்று அந்த மணப்பெண் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்ததுடன், திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்றும், நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன் என்றும், அவர் தனக்காக காத்து இருப்பதால் அவரைதான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறினார். இதனால் அதிர்ச்சியான மணமகன் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தினர்.
இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை விழாவில் கலந்து கொண்ட ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார். அது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது. அத்துடன் அந்த மணப்பெண்ணை மணம் முடிக்க காதலன் வரவில்லை என்றும் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேற்ற பட்டார் என்றும் சென்னையில் உள்ள தனது காதலரை பார்க்க சென்றதாகவும் தகவல் கசிந்தது.
இந்த நிலையில் திருமணத்தை நிறுத்திய இளம்பெண் ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் நான் யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு சென்னையில் காதலர் யாரும் இல்லை. நான் காதலனை தேடி சென்னைக்கு செல்லவும் இல்லை. தற்போது நான் எனது சொந்த ஊரில் பெற்றோருடன்தான் இருக்கிறேன். மணமகனை பிடிக்காததால் திருமணத்தை நிறுத்த வேறு வழியின்றி அவ்வாறு கூறினேன். என்னை பற்றி யாரும் விமர்சிக்கவோ இந்த சம்பவத்தை பெரிதுபடுத்தவோ வேண்டாம் என்று கூறப்பட்டு உள்ளது.
ஏற்கனவே திருமணத்தை நிறுத்திய இளம்பெண், தற்போது திருமணத்தை நிறுத்தியது ஏன் என்பது குறித்து ஆடியோ வெளியிட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது இந்த ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது மேலும் அந்த பெண் பெற்றோருடன் இருக்கும் போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.