அதிக நேரம் ஆன்லைன் கேம் விளையாடியதால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு சிறுவன் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள வி.மணவெளி அன்னை தெரேசா நகரைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மகன் தர்ஷன், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று காலை முதல் மாலை வரை ஆன்லைன் வகுப்பில் இருந்த தர்ஷன் பின்னர் 4 மணியில் இருந்து 7 மணி வரை செல்போனில் ஃபீரி பயர் எனும் ஆன்லைன் கேமைத் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார். காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு அதிக சத்தத்துடன் விளையாடிக் கொண்டிருந்த அவர் திடீரென மயங்கிக் கீழே விழுந்து கிடந்தார். இதனைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து மாணவர் தர்ஷனை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தர்ஷனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தநிலையில் தர்ஷனின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் வந்துள்ளன. அதில் நீண்ட நேரம் ஆன்லைன் கேம் விளையாடியதால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் ஹெட்போனை அதிக சத்தத்துடன் வெகு நேரம் மாட்டி இருந்தது காரணம் என்று கூறப்படுகிறது. விபத்து ஏற்படும்போது தான் மூளையில் இதுபோன்ற பிரச்சினை ஏற்படும் ஆனால் தொடர்ந்து கேம் விளையாடியபோது இதுபோன்று நிகழ்ந்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தெரிவித்துள்ள புதுச்சேரி காவல்துறை பிள்ளைகளை தொடர்ந்து செல்போனை வைத்திருக்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோரது கடமை என்று கூறியுள்ளனர்.