தமிழ்நாடு ஆளுநராகப் பணியாற்றி வந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக நாகாலாந்து ஆளுநராக இருக்கும் ரவீந்திர நாராயண் ரவி புதிய தமிழ்நாடு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் ஆளுநராக பொறுப்பு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன் பன்வாரிலால் டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்தார். இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 9) குடியரசுத் தலைவர் வெளியிட்ட உத்தரவில் இந்த ஆளுநர் குறித்த மாற்றங்கள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.
பிகாரில் உள்ள பாட்னாவில் பிறந்த ரவீந்திர நாராயண் ரவி 1974இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார் மற்றும் பத்திரிகைத் துறையில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு 1976இல் ஐபிஎஸ் தேர்வில் வெற்றிபெற்று இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா கேடர் ஒதுக்கப்பட்டது. பத்தாண்டுகளுக்கும் மேலாக கேரளாவில் மாவட்ட எஸ்பி உட்பட பல்வேறு பதவிகளில் கேரளாவிலேயே பணியாற்றினார், பின்னர் சிபிஐ-யில் பணியாற்றியபோது, நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட பல்வேறு முறைகேடுகளைத் துப்பு துலக்கி நடவடிக்கை எடுத்தார்.
நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் உளவுத் துறை பணியகத்தில் (IB) இருந்தபோது, அவர் ஜம்மு & காஷ்மீர் மற்றும் வடகிழக்கு உள்ளிட்ட விவகாரங்களைக் கையாண்டார். மேலும் ரவி, தெற்காசியாவில் மனித குடியேற்றத்தின் இயக்கவியலில் நிபுணத்துவம் பெற்றார் மற்றும் எல்லை மக்களின் அரசியல் சமூகவியலில் விரிவாகப் பணியாற்றியுள்ளார்.
பல ஆயுதக் கிளர்ச்சி குழுக்களை அமைதி வழிக்குக் கொண்டு வந்தவர் ரவி. 2012இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் நரேந்திர மோடியின் மத்திய அரசில் அவர் பிரதம மந்திரி அலுவலகத்தில் கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார், உளவுத் துறை ஏஜென்சிகளை ஒருங்கிணைத்து வழிகாட்டினார். 29 ஆகஸ்ட் 2014 அன்று நாகா சமாதான பேச்சுவார்த்தையில் அவர் முக்கியப் பங்காற்றினார். அக்டோபர் 2018இல் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இந்த பின்னணியில் 2019 ஆகஸ்டில் நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட ரவி, அங்கே இரு ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிலையில் தற்போது தமிழ்நாடு ஆளுநராகத் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.