நாகர்கோவில் அருகே எள்ளுவிளை பத்தன்காடை சேர்ந்தவர் செல்ல சுவாமி. இவரது மகன் 32 வயதான நவீன். நவீன் படித்து விட்டு வேலை கிடைக்காமல் விரக்தியில் இருந்துள்ளார். வேலை கிடைத்தால், சாமியிடம் வந்து விடுவேன் என வேண்டுகோளை வைத்துள்ளார். இந்தநிலையில் வங்கி தேர்வில் தேர்ச்சி பெற்று மும்பையில் உள்ள பிரபல வங்கியில் உதவி மேலாளராக பணி கிடைத்தது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு நவீன் பணியில் சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில் தனக்கு வேலை கிடைத்ததால், வேண்டியபடி தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, நேற்று அதிகாலை விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த நவீன், காலை நாகர்கோவில் வந்துள்ளார். பின்னர் சாமிக்கு வேண்டியபடி தனது உடலை காணிக்கையாக தருவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு புத்தேரியில் ரயில்வே பாலத்தின் கீழ் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி நாகர்கோவில் சந்திப்பு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலை கிடைத்ததற்காக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.