ஜெயலலிதாவின் வேதா இல்லம் வருகிற 28-ம் தேதி மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை :
சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் வசித்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார்.ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்தார்.
சட்டசபையிலும் இதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா வசித்த இல்லத்தை நினைவிடமாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக ரூ.68 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த தொகையையும் அரசு கோர்ட்டில் செலுத்தியது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றமும், நினைவில்லம் அமைக்க அனுமதி வழங்கியது. நினைவில்லமாக மாற்றி அதை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விட தமிழக அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை வருகிற 28-ஆம் தேதி மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். வேதா இல்லத்தில் ஜெயலலிதா படித்த புத்தங்கள், பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு இடம்பெறும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.