பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய வேண்டி இன்று மாலை ரசிகர்கள் கூட்டுப்பிராத்தனையில் ஈடுபட வேண்டும் என திரையுலகினர் உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
தமிழ் நெஞ்சங்களில் நீங்காதொரு இடத்தினை பிடித்துள்ள பாடகர்களில் ஒருவர் தான் எஸ்.பி.பி. “மண்ணின் இந்த காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ” என காதலர்களுக்கான பாடல் தொடங்கி வாழ்வில் அனைத்து சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் அவரது பாடல்கள் தற்போது வரை ரீங்காரமாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது என்றே சொல்லலாம்.
ஆனால் கடந்த சில தினங்களாக அவர் எப்போது கொரோனாவினால் மீண்டு வருவார் என்ற ஏக்கம் தான் திரையுலகத்தினர் முதல் ரசிகர்கள் வரை அதிகளவில் உள்ளது. எஸ்.பி.பியின் உடல்நிலை மோசமாகியுள்ள நிலையில் எக்மோ, உயிர்க்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய வேண்டிய இன்று மாலை 6 மணிக்கு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கூட்டுப்பிராத்தனையில் ஈடுபட வாருங்கள் எனவும், இந்த பிராத்தனை நிச்சயம் எஸ்.பி.பியை மீண்டும் நம்முடன் சேர்ந்து பயணிக்கும் என இசைஞானி இளையராஜா,பாரதி ராஜா, நடிகர் சத்தியராஜ், விவேக், மனோபாலா உள்ளிட்ட பல்வேறு திரையுலகத்தினர் ரசிகர்களுக்கு உருக்கத்துடன் அழைப்பு விடுத்து வருகின்றனர்.