நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!

ஆக்கிரமிப்பிலிருந்து நீர்நிலைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் காவல் நிலையம் தாமரைக்கேணி என்ற நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ”செம்மச்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது.இதே போன்று தமிழகத்தில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. கால்வாய்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது நீர் தேங்கும் பகுதிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்கிங்காம் கால்வாயை முறையாக சீர்படுத்தவில்லை என்றால், புத்தகங்களில் வரலாறாக கால்வாய் பற்றிய பதிவுகள் மட்டும்தான் இருக்கும்” என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

தொடர்ந்து, சென்னையில் மொத்தம் எத்தனை நீர் நிலைகள் உள்ளது? கேள்வி எழுப்பி, நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக அதிகாரிகள் விழிப்புடன் செயல்படவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் ஆக்கிரமிப்பிலிருந்து நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Exit mobile version