சென்னையை சேர்ந்த எஜ்ஜி கே. உமாமகேஷ் என்பவர், தான் மரணிக்கப்போவதை உணர்ந்து முன் கூட்டியே தனது இரங்கல் குறிப்பை கைப்பட எழுதி குடும்பத்தினரிடம் அளித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அந்த இரங்கல் குறிப்பு, தற்போது வைரலாகி வருகிறது.
சென்னையை சேர்ந்த தொழிலதிபரும், நடிகரும், கார் ரேலி ரேஸருமான 72 வயதான எஜ்ஜி கே. உமாமகேஷ், கடந்த வெள்ளிக்கிழமையன்று காலமானார். அது தொடர்பாக, ‘சுய இரங்கல் அறிவிப்பு’ என நாளிதழ்களில் அளிக்கப்பட்ட விளம்பரத்தை பார்த்தவர்களுக்கு பெரும் வியப்பு ஏற்பட்டது. தற்போது இந்த இரங்கல் விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக ஒருவர் இறந்தால், அவரை சார்ந்த அவருடைய நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், நிறுவன ஊழியர்கள் பெயரில்தான் இரங்கல் தொடர்பான அறிவிப்பு விளம்பரமாக கொடுக்கப்படும். ஆனால், எஜ்ஜி கே. உமாமகேஷ் சற்று வித்தியாசமாக, தான் மரணம் அடையப்போவதை உணர்ந்து, தனது மரணத்திற்கான இரங்கல் குறிப்பை தாமே கைப்பட எழுதி, தனது குடும்பத்தினரிடம் கொடுத்து அதை பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
அந்தக் குறிப்பில், ”அன்பான நண்பர்களே, பகைவர்களே, இந்த இரண்டுக்கும் இடைப்பட்டவர்களே, எனது அழகான வாழ்நாளில் பங்கெடுத்து கொண்டதற்கு நன்றி. யாரையும் நான் அந்தரத்தில் விட்டுச் செல்லவில்லை என நினைக்கிறேன். எல்லோருக்குமான நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அழகான முறையில் வாழ்ந்து வாழ்க்கையை கொண்டாடுங்கள், எனக்கான பார்ட்டி முடிந்துவிட்டது, உங்கள் பார்ட்டியை தொடருங்கள். சியர்ஸ் சொல்லி விடை பெறுகிறேன். உங்கள் எஜ்ஜி” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது மரணம் குறித்த செய்தி அறிந்தப் பின்னர், இரங்கல் தெரிவிப்பதற்காக யாரும் வர வேண்டாம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே அவர் தனது உடல் உறுப்புகளையும் தானமாக கொடுத்துச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கண், சிறுநீரகம், உள்ளிட்ட உறுப்புகளை உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு காத்திருப்பவர்களுக்கும், உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் உடற்கூறியல் ஆராய்ச்சிக்காகவும் கொடுத்துச் சென்றுள்ளார், எஜ்ஜி கே. உமாமகேஷ்.