திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.3 கோடிக்கும் மேல் நகைக்கடன் வழங்குதலில் மோசடி செய்யப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த மோசடி தொடர்பாக வங்கியின் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதுடன் செயலாளர், துணை செயலாளர், நகை மதிப்பீட்டாளர் உட்பட4 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதும் வங்கி உயர்அதிகாரிகள் அனைத்து கூட்டுறவு வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்ட நகைகளின் விபரம் குறித்து அறிய வங்கிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் குரும்பூர் அங்கமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மற்றும் சார்பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த 8ம் தேதி மற்றும் 13ம் தேதி நகைக்கடன்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மொத்தம் நகைக்கடனாக பெறப்பட்ட நகைகள் வங்கியில் 548 பைகளில் வைக்கப்பட்ட நகைகளில் 261 நகை பைகள் காலியாக இருந்தது ஆய்வில் தெரியவந்தது. இது ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தொடர்ந்து நடத்திய விசாரணையில் நகையே இல்லாமல் நகைக்கடன் என்ற பெயரில் ரூ.2 கோடியே 3 லட்சத்து 92 ஆயிரத்து 700 ரூபாயை வங்கி அதிகாரிகள் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு தெரியவந்ததால் அடகு வைத்த நகைகள் குறித்து விசாரணை அதிகாரியிடம் கேட்டறிந்து புகார் மனுக்களை கொடுத்து சென்றனர்.
இதேபோல் வங்கியில் டெபாசிட் செய்த பணம் இருக்கிறதா என்று வாடிக்கையாளர்கள் வந்து பார்த்தபோது, டெபாசிட் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைக்காமல் அவர்களுக்கு போலியான பாண்ட் கொடுத்து ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது. தொடர்ச்சியாக வங்கியில் லட்சணக்கில் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்து விசாரணை குழுவினரிடம் புகார் அளித்து வருகின்றனர்.
இதனால் பண மோசடி ரூ.3 கோடிக்கும் மேல் செல்லலாம் என்று தெரியவருகிறது. இதனையடுத்து வங்கி தலைவர் முருகேசப்பாண்டியன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். செயலாளரார் தேவராஜ், துணை செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய், ஆழ்வை. வட்டார கூட்டுறவு வங்கி கள அலுவலர் ஆழ்வார் குமார் ஆகியோர் தற்காலி பணிநீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.