தமிழகத்தில் 2 வது தலைநகரம் திருச்சியா? மதுரையா என அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துகள் கட்சியில் ஒற்றுமையின்மையை வெளிப்படையாக காட்டுகிறது என விமர்சனங்கள் எழுந்துவருகிறது.
தமிழகத்தின் தலைநகராக சென்னை இருந்து வரும் நிலையில், பல்வேறு அலுவலக பணிகளுக்காக தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வருவதற்கு மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே 2 வது தலைநகரம் தென் மாவட்டங்களில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் அமையப்பெற்றால் சிறப்பாக இருக்கும் என கருத்து பரவலாக எழுந்து வந்தது.
இந்த நிலையில் தான் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக மதுரையில் அமைச்சர் ஆர்.பி உதயக்குமார், மதுரையை தமிழகத்தில் 2 வது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதோடு மதுரை மேற்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதில் சென்னைக்கு அடுத்தாற்போல் மதுரை தான் 2வது தலைநகரமாக செயல்படுவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது. அதோடு விமான சேவை, இரயில் சேவை போன்ற போக்குவரத்து வசதிகள் தென் மாவட்டங்களை இணைக்கு வகையில் அமைந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை போன்றவையும் வரவுள்ளதால் மதுரையை 2 தலைநகரமாக அறிவித்து தென் மாவட்ட மக்களின் கனவினை நினைவாக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதோடு அமைச்சர் செல்லூர் ராஜூவும் இதே கருத்தினை வலியுறுத்திவந்தார்.
இதற்கிடையில் தான் இன்று திருச்சியை 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டியளித்துள்ளார். அதில் முதல்வர், துணை முதல்வரிடம் மன்றாடி திருச்சியை 2-வது தலைநகராக்க முயற்சி எடுப்போம் என கூறியுள்ளார்.
அ.தி.மு.க.,வில் பிரச்சனை தீரவில்லையா?
ஏற்கனவே மதுரையை 2 வது தலைநகரமாக்க வேண்டும் என்ற கோரிக்கையினை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் முன்வைத்த 2 தினங்களிலியே அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் தற்போது திருச்சியினை தலைநகரமாக்குவதற்கு குரல் கொடுப்பது கட்சியினரிடையே ஏற்படும் உட்கட்சி பிரச்சனையை வெளிக்காட்டுகிறது எனவும், ஏற்கனவே அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற போட்டோ போட்டி நடந்து வரும் நிலையில் அமைச்சர்களின் இந்த மாறுபட்ட கருத்துக்கள் கட்சியில் ஒற்றுமையின்மையை காட்டுவதாகவே அமைகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதோடு சட்டமன்ற தேர்தலை முன்வைத்து அந்தந்த தொகுதி மக்களிடையே நற்பெயரை வாங்கும் முயற்சியில் இதுப்போன்ற கருத்துகளை அமைச்சர்கள் முன்வைக்கின்றனர் எனவும் சொல்லப்படுகிறது.