அரசு பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பை 32-ஆக உயர்த்தும் அரசாணை தமிழ்நாடு அரசால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைக்கு இந்த வயது வரம்பு 30 வயதென்று உள்ளது. குறைவான வயது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கும் வயது உச்ச வரம்பு 32ஆக உயர்த்தி மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 32ஐ விட அதிகமாக வயது உச்ச வரம்பு கொண்டுள்ள பதவிகளை பொறுத்தவரை, நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு மேலும் இரண்டு ஆண்டுகள் உயர்த்தப்படுவதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவையன்றி கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு நீட்டிப்பு அல்லது தளர்வுகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை பொறுத்தவரை நடைமுறையில் உள்ள வயது உச்ச வரம்பில் மாற்றம் இல்லை எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்தியும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.