கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என விமர்சித்துள்ளார். மேலும் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவேன் என மு.க. ஸ்டாலின் உறுது அளித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்கான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காத கவர்னரை கண்டித்தும், மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக அரசை கண்டித்தும், சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதில் டி.ஆர். பாலு, கனிமொழி, உதயநிதி, கே.என். நேரு, பொன்முடி உள்ளிட்ட பல தி.மு.க. பிரமுகர்களும் பங்கேற்றுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் குளறுபடி ஏற்படுகிறது என்றும் நீட் தேர்வை பொருத்தவரை தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது என்றும் காட்டமாக பேசியுள்ளார். மாணவர்களுக்கு நீட் தேர்வு பலிபீடமாக உள்ளது எனவும், இதைப் பார்த்துக்கொண்டு எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என்றும் கேள்வி எழுப்பினார்.
7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கு அழுத்தம் கொடுக்காமல், அ.தி.மு.க. அரசு அஞ்சுவதாக ஸ்டாலின் கூறியுள்ளார். நீட் தேர்வு கூடாது என்பது தான் நமது கொள்கை என்றும், கருணாநிதி, ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழைய முடியவில்லை என்றும் தெரிவித்த ஸ்டாலின், பழனிசாமி ஆட்சியில் நீட் தேர்வு நுழைந்துள்ளதாகவும், நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது எனவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், முதலமைச்சர் பழனிசாமி ஆளுநரை கேள்வி கேட்காவிடில், எதிர்க்கட்சித் தலைவராக நான் கேள்வி கேட்பேன் என்றும், தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவேன் என்றும் அவர் பேசினார். உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு 40 நாட்கள் ஆகியும் கவர்னர் இன்னும் அனுமதி தரவில்லை. அனுமதியை பெற்றுத்தர முடியாத அரசாக பழனிசாமி ஆட்சி உள்ளது.