கதர் ஆடைகளை பயன்படுத்தி நெசவாளர்களுக்கு கைகொடுக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:
காந்தியடிகளின் பிறந்த நாள் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கதர் பயன்படுத்துவதினால் மட்டுமே லட்சக்கணக்கான ஏழை மக்கள் அவர்தம் இல்லத்திலேயே வேலை செய்து நேர்மையாக வாழ வழி வகுக்கிறது என்ற காந்தியடிகளின் வரிகளை மனதில் நிறுத்த வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள நூற்போர் மற்றும் நெசவாளர்களைக் கொண்டு தற்கால நாகரீகத்திற்கு ஏற்றவாறு நேர்த்தியான முறையில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகளும், கிராமங்களில் வாழும் கைவினைஞர்கள் மூலம் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களும், தமிழ்நாடு முழுவதும் உள்ள 51 கதரங்காடிகளின் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
நெசவாளர்கள்:
கதர் ஆடைகளின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து கதர் ரகங்களுக்கும் ஆண்டு முழுவதும் 30 சதவிகிதம் தள்ளுபடி வழங்குகிறது.
தமிழக அரசு, கதர் நெசவாளர்களின் மேம்பாட்டிற்காக, நெசவாளர்களின் குடும்பத்தினருக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, விபத்து, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
உதவ வேண்டும்.
கதர் ஆடைகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் வாங்கிப் பயன்படுத்த வேண்டும். ஏழை, எளிய கதர் நூற்போர் மற்றும் நெசவாளர்களுக்கு கை கொடுப்போம் அவர்கள் வாழ்வு சிறக்க ஒளி ஏற்றி உதவிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.