வங்கி பணியாளர் தேர்விற்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும் என, திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.பி.எஸ்.சி எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் பல்வேறு வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த திருவள்ளுர் மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினால் ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக தங்களது விருப்பத்தினை செல்போன் எண்ணுடன் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, பயிற்சி வகுப்பு தொடங்கும் நாள் குறித்து செல்போன் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், விவரங்களை அறிய 044-27660250, 9444815728 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.