2021 தேர்தல் மக்களாட்சியாக தமிழ்நாடு மாநிலத்துக்கு விடிவுகாலம் வரக்கூடிய ஆட்சியாக அமையும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் கோவிலுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறும்போது, “கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் வருகிற சட்டப் பேரவை தேர்தலில் 3 அணி அமைய வாய்ப்பு உள்ளதா ? என மகன் விஜய் பிரபாகரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு விஜய்பிரபாகர், தமிழ்நாட்டில் தேர்தல் வரும்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். மேலும் தே.மு.தி.க. பலமுறை தனித்து போட்டியிட்டு தேர்தல் களத்தை சந்தித்து உள்ளது. ஆகையால் பொறுத்திருந்து பாருங்கள் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் இன்றுவரை நாங்கள் தற்போது அ.தி.மு.க கூட்டணியில் தான் உள்ளோம். மேலும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற பிறகு தேர்தல் நிலை குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெளிவாக அறிவிப்பார்.
தற்போது நடக்க உள்ள தேர்தல் எல்லோருக்கும் முதல் தேர்தலாகும்.ஏனென்றால் மூத்த தலைவர் கருணாநிதி இல்லாமல் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க. தேர்தல் களத்தை சந்திக்க உள்ளனர். இதனால் எல்லோருக்கும் இந்த தேர்தல் புது தேர்தல் போன்றது ஆகும்.இதனால் நிச்சயமாக இந்த தேர்தல் மாற்றத்தை மக்களுக்கான நல்ல ஒரு தமிழ் நாட்டை உருவாக்க நல்ல வெற்றியை நிச்சயமாக கடவுள் தருவார் என நம்புகிறேன்.
எங்களைப் பொறுத்தவரைக்கும் அதிமுக ஆட்சியை நிறையும், குறையும் நிறைந்த ஆட்சியாக நாங்கள் பார்க்கிறோம். ஏனென்றால் நல்ல விஷயம் அதிமுக பல நல்லது செய்து உள்ளனர். இந்த கொரோனா காலத்தில் நல்ல நிர்வாகத் திறனை வெளிப்படுத்தி மக்களுக்கு தேவையான பல பணிகள் செய்து உள்ளனர். இதேபோல் அவர்கள் செய்ய வேண்டிய நிறைய விஷயங்கள் செய்யாமல் உள்ளனர். அதனை நாங்கள் சுட்டிக் காட்டுவோம்.ஆனால் 2021 தேர்தல் மக்களாட்சியாக தமிழகத்திற்கு விடிவுகாலம் வரக்கூடிய ஆட்சியாக அமையும். தேர்தல் நேரத்தில் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் வருவார். தற்போது நல்ல உடல் நலமுடன் உள்ளார். அதனால் தொண்டர்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்” என்றார்.