இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் தொடங்கிய கட்சியிலிருந்து விலகிவிட்டதாக விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் பெயரில் அவரது அப்பா சந்திரசேகரன் கட்சியைப் பதிவு செய்துள்ளதாக நேற்று ஊடகங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த கட்சி விவகாரத்துக்கு விஜய் மறுப்புத் தெரிவித்து என் பெயரைப் பயன்படுத்தி கட்சி நடவடிக்கைகள் இருந்தால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் இன்று சென்னை சாலிகிராமத்தில் நடிகர் விஜய்யின் தந்தை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது :
எனக்குத் தேவைப்பட்டதால் நான் கட்சி தொடங்கியிருக்கிறேன்…நானும் விஜய்யும் கருத்துவேறுபாட்டுடன் இல்லை. 1993 ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கம் ஒரு அமைப்பாக தொடங்கப்பட்டது. விஜய் ரசிகர்களின் நலனுக்காகவும் அவர்களை உற்சாகத்துக்காவும் இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
விஜய் மக்கள் இயக்கம் தொடங்கியுள்ளது எல்லாம் நன்மைக்காகவே. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் , விஜய்யின் தந்தை தொடங்கிய கட்சியில் பொருளாளராக நான் இல்லை. அதிலிருந்து நான் விலகி விட்டேன் என்று ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளது. இது ரசிகர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.