தீபாவளியை முன்னிட்டு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் போக்குவரத்து துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீபாவளிப் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 8 போக்குவரத்து மண்டலங்களைச் சேர்ந்த மேலாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்களுக்காக 16 ஆயிரத்து 540 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல் தீபாவளி முடிந்து ஊர் திரும்பு மக்களுக்காக 17 ஆயிரத்து 719 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் ஆயுதபூஜை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.