கொரோனா மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பால் உயிரிழந்த, காங்கிரஸ் எம்.பி எச்.வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான அகதீஸ்வரத்தத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான எச்.வசந்தகுமாருக்கு, கடந்த 10ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடைய நுரையீரலில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் கவலைக்கிடமாகவே இருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட வசந்தகுமார் உடல், சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவருடைய வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு நேற்று வைக்கப்பட்டது. பிறகு அவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக சொந்த ஊரான அகதீஸ்வரம் எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு குமரி அனந்தன் தெருவில் உள்ள வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் அவருடைய வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட உடல், வசந்தகுமாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள அவருடைய அப்பா, அம்மாவின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. சந்தனபேழையில் கிடத்தப்பட்ட கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமாரின் உடலுக்கு அனைத்து இறுதி மரியாதையும் முறைப்படி செய்யப்பட்டது.