ஆவடியில் டிரைவர் திடீரென பிரேக் போட்டதில், நடத்துனர் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை அடுத்த ஆவடி போக்குவரத்து பணிமனையில் இருந்து பூந்தமல்லிக்கு (தடம் எண் 623) அரசு மினி பஸ் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. பேருந்தை சேகர் எனும் டிரைவர் ஓட்டிச் செல்ல, நடத்துனராக ஆறுமுகம் என்பவர் இருந்துள்ளார். பேருந்திலும் பயணிகளின் கூட்டம் கனிசமாகவே இருந்துள்ளது. இந்நிலையில், பேருந்து ஆவடி, காமராஜர் நகர் வழியாக வந்து கொண்டிருந்தபோது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்று திடீரென சாலையின் குறுக்கே ஓடி வந்துள்ளது.
இதனை கவனித்து அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனடியாக பிரேக் போட்டு பேருந்தை நிறுத்தியுள்ளார். அப்போது, அருகில் நின்று கொண்டிருந்த நடத்துனர் ஆறுமுகம் நிலை தடுமாறி முன்பக்க கண்ணாடி மீது மோதி பேருந்தின் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே விழுந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக, ஆறுமுகத்துக்கு உடலில் லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டது. மேலும், கண்ணாடி உடைந்து நொறுங்கியதில், டிரைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
நடிகர் வடிவேலுவின் திரைப்படத்தில் பஸ்சில் நின்று கொண்டு பயணம் செய்வார். அப்போது, கண்டக்டர் விசில் அடிக்க, டிரைவர் திடீரென்று பிரேக் போடுவார். அப்போது, வடிவேலு பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து கொண்டு தரையில் விழுவார். அதுபோல, ஆவடியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.