மீரா மிதுனுக்கு வந்த சோதனை

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பரின் இரண்டாவது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது நீதிமன்ற காவல் வரும் 9 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது

இந்நிலையில் ஜாமீன் வழங்க கோரி, மீரா மிதுனும், சாம் அபிஷேக்கும் இரண்டாவது முறையாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர் 20 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாலும், பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாலும், தான் பெண் என்பதை கருத்தில் கொண்டும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென மீரா மிதுன் கோரியிருந்தார்

இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்த போது அரசுத்தரப்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் சத்யா, பட்டியலின் மக்களை புண்படுத்தும் வகையில் மீரா மிதுன் பேசி இருப்பது சமுதாயத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதில் பாலின ரீதியான முன்னுரிமை வழங்க கூடாதெனவும்,தற்போது ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என் எதிர்ப்பு தெரிவித்தார். அதே போல மீரா மிதுனின் நண்பர் சாம் அபிஷேக்கும் எல்லா வகையிலும் மீரா மிதுனின் செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும், மீரா மிதுனின் வீடியோக்களை படம் பிடிப்பதும் பதிவேற்றம் செய்வதும் அவர்தான் எனவும் எடுத்துரைத்தார். அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி செல்வகுமார், மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக்கின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

Exit mobile version