ஆவடி டேங்கர் தொழிற்சாலைக்கு 7,523 கோடி ரூபாய் செலவில் அர்ஜுன் எம்.கே 1ஏ வகையை சேர்ந்த 118 டேங்கர் தயாரிக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆர்டர் வழங்கியுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கட்டமைப்பை வலுப்படுத்தவும், இந்திய தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அர்ஜுன் எம்.கே ஏ1 ரக டேங்கர் ( பீரங்கிகள் )-களை தயாரிப்பதற்கான ஆர்டரை ஆவடி பாதுகாப்பு தொழிற்சாலைக்கு வழங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2010-2012 ஆண்டில் டி.ஆர்.டி.ஓ போர் வாகன பயிற்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து அர்ஜுன் எம்.கே ஏ1 ராக டேங்கரை உருவாக்கியது. குண்டு வெடிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ளல், துப்பாக்கி சுடுதலை தங்கும் திறன் என பலகட்ட சோதனைகளுக்கு பிறகு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட அர்ஜுன் எம்.கே 1ஏ டேங்கர் 72 புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டது ஆகும்.
குறிப்பாக, துல்லியமான தாக்குதல், நிலப்பரப்பின் மீது வேகமாக செல்லுதல், இரவு நேரங்களில் கண்காணிப்பு ( நைட் விஷன் ) திறன் கொண்ட கருவிகள் , அனைத்து வகையான நிலப்பரப்பில் செலுத்தும் தன்மை என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இருந்தது. இவற்றை நாட்டின் பாதுகாப்புக்காக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி ராணுவ தளபதி எம்.எம் நரவானேவிடம் இதனை கடந்த பிப்ரவரி மாதம் ஒப்படைத்தார். இந்திய எல்லைகளை அடிப்படையாக கொண்டு அதற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்ட டேங்கர்களை தற்போது அதிக அளவில் தயாரிக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆவடி பாதுகாப்பு கனரக தொழிற்சாலைக்கு ஆர்டர் வழங்கியுள்ளது.
7,523 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் 118 டேங்கர்களை தயாரிப்பதன் மூலம் சுமார் 8,000 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் ஆத்மநிர்பார் ( இந்திய தயாரிப்பு ) திட்டத்தின் மிக பெரிய வெற்றியை அடையும் நோக்கில் இந்த ஆர்டர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.