டெல்லியில் பா.ஜ.க. பொதுச்செயலாளரும், தமிழக பா.ஜ.க பொறுப்பாளருமான முரளிதரராவ் முன்னிலையில், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. கர்நாடக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, தமிழகம் திரும்பினார். பல நேரங்களில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வந்த அவர், ஜே.பி.நட்டா முன்னிலையில், இன்று பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தெரிவித்தார்.
ஆனால் அவரால் ஜே.பி.நட்டாவை சந்திக்க முடியவில்லை என்றுக் கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.க. கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளருமான முரளிதரராவ் முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். அப்போது தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த பணியாற்றுவேன் என்றும், தாம் பா.ஜ.க.வின் விசுவாசமான தொண்டனாக இருக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். நான் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனின் தீவிர ரசிகன்” எனவும் தெரிவித்துள்ளார்.