அனிதா, இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்து விட முடியாது. நீட் தேர்வினால், தனது கனவை தொலைத்து, வாழ்க்கையையே முடித்து கொண்ட அனிதாவின், நினைவு தினம் இன்று.
அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவருக்கு நான்கு சகோதரர்கள். இளம் வயதிலேயே தாயை இழந்த அனிதாவிற்கு, அவரது தந்தையும், பாட்டியும், சகோதரர்களும் தான் ஆதரவு.
அனிதாவின் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில், மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளியாக வேலை செய்து, குடும்பத்தைக் காப்பாற்றியவர். பள்ளியில் படித்துக்கொண்டிருந்த தனது மகளை, 10 நாட்களுக்கு ஒரு முறை சென்று பார்த்துவிட்டு, எதையாவது வாங்கிக்கொடுத்துவிட்டு வருவாராம், அனிதாவின் பாசமிகு தந்தை சண்முகம். கடினமாக உழைத்து, பொறுப்புள்ள தந்தையாக, தனது நான்கு மகன்களயும் கல்லூரி படிப்பு முடிக்க வைத்து, தனது கடமையை அசராமல் செய்திருக்கிறார், சண்முகம்.
அனிதா நன்றாகப் படிக்கக்கூடிய மாணவி; வறுமை வாழ்க்கையில் துரத்திய போதும், கல்வியை மட்டுமே கண் முன்பாக நிறுத்தி, முன்னேறிக் கொண்டே செல்ல வேண்டும் என்ற கனவோடு பயணம் செய்த அனிதா, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 478 மதிப்பெண்கள் பெற்றார். கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 99, தமிழில் 96, ஆங்கிலத்தில் 83 மதிப்பெண்கள் எடுத்தார்.
இவ்வளவு வறுமையிலும் நன்றாகப் படித்த அனிதாவுக்கு, அருகில் இருக்கும் தனியார் பள்ளியில், கட்டண சலுகையில் இடம் அளித்தனர். விடுதியும் கிடைத்தது. இனி எல்லாம் வெற்றி தான் என்ற எண்ணத்தோடு, எப்படியாது மருத்துவராகி விட வேண்டும் என்ற கனவோடு, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திய அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார்.
மாநில பாடத் திட்டத்தின்படி அனிதாவின் கட் ஆப், 196.5 மதிப்பெண்கள். கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்திருந்தால், அனிதாவுக்கு நிச்சயம் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்திருக்கும். ஆனால் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்படியான நீட் தேர்வை எழுதிய அனிதாவால், 86 மதிப்பெண்கள்தான் பெற முடிந்தது. இதனால் மருத்துவ படிப்பு கனவு கேள்விக்குள்ளானது.
அரியலூரில் நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் தன்னெழுச்சியாக கலந்து கொண்ட அனிதா, அப்போதைய தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கரை சந்தித்து தனது நிலைமையை கூறினார். இதை எம்.எல்.ஏ. சிவசங்கரும் முகநூலில் வெளியிட்டார். இதனையடுத்து, அனிதா போன்ற நீட் எதிர்ப்பாளர்களை, சமூக வலைதளங்களில் பதிவிட அழைப்பு விடுத்தனர். ஏராளமானோர் அந்த பக்கத்தில், தொலைந்து போன மருத்துவக் கனவு குறித்து பதிவிட்டனர்.
2016-ஆம் ஆண்டு தொடர்ந்தே, நீட் தேர்வு தொடர்பான வழக்குகள் நடந்து வந்த நிலையில், 2017 ஆகஸ்ட் 16-ஆம் தேதியன்று அரசுத் தரப்பிடமிருந்து அனிதாவின் சகோதரருக்கு அழைப்பு வந்தது. அடுத்த நாள், உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பான வழக்கு வருவதால், அதில் அனிதாவும் பங்கேற்றால், தமிழகத் தரப்பை முன்வைக்க நன்றாக இருக்கும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து டெல்லி சென்றார் மாணவி அனிதா.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தது. அப்போதுதான் அனிதா செய்தியாளர்களைச் சந்தித்து தன் தரப்பை முன்வைத்தார். மீண்டும் செவ்வாய்கிழமை கூடிய நீதிமன்றம், நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவச்சேர்க்கை நடைபெறும் என்று தீர்ப்பளித்தது. எனவே, தமிழக அரசும் உடனடியாக சேர்க்கைக்கான ஏற்பாடுகளைத் தொடங்கியது.
இதில் பெரும் வருத்தம் இருந்தாலும், சோர்ந்துவிடாத அனிதா, அண்ணன் மணிரத்னம் விரும்பியதைப் போல ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராவதாக சொன்னார். ஆனாலும், தனது மருத்துவக் கனவு தகர்ந்த நிலையில், 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீட்…தொடரும் தொடர்கதை…
2013
ஜூலை மாதம், நீட் தேர்வு அரசியலமைபிற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் கூறியது.
2016
ஏப்ரல் மாதத்தில், காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிபதி அனில்தவே தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு, நீட் தேர்வு செல்லாது என்ற தீர்ப்பை திரும்பப் பெறுவதாக கூறி, நீட் தேர்விற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. மேலும், நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட முதன்மை வழக்கு விரிவாக விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
மே மாதத்தில், தான் ஆட்சிக்கு வந்தால் நீட்டிற்கு எதிரான சட்டம் கொண்டு வரப்படும் என தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்த ஜெயலலிதா, நீட்டிற்கு எதிராக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
2017 (அனிதா இறந்த ஆண்டு)
மே 7, நீட் தேர்வு நடைபெற்றது. இதில் மாணவ மாணவியர் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக சர்ச்சைகள் எழும்பின.
மே 26, நீட் தேர்வில் ஆங்கிலம் மற்றும் பிற மொழி கேள்விகள் வெவ்வேறாக இருந்தன என வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீட் தேர்விற்கான முடிவுகளை வெளியிடக் கூடாது என இடைகால உத்தரவு பிறப்பித்தது.
ஜூன் 12, நீட் முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
ஜூன் 23, ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
ஜூலை 14, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கையின்போது, மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், மாநில அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்பட்டது.
ஜூலை 25, நீட் முறையில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து வலியுறுத்தினார்.
ஆகஸ்டு 13, தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களுக்கு மட்டும், நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் அவசரச் சட்டம் கொண்டுவந்தால், அதற்கு ஒத்துழைக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ஆகஸ்டு 14, நீட் தேர்வு முறையில் இருந்து நடப்புக் கல்வியாண்டில் மட்டும் விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்தின் வரைவை, மத்திய அரசின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.
ஆகஸ்டு 22, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நீட் தேர்வு அடிப்படையிலேயே, மாணவர்களுக்கான சேர்க்கையை, செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதில் தான், தமிழகத் தரப்பின் வாதத்தை முன்வைக்க டெல்லி சென்றார் மாணவி அனிதா.
ஆகஸ்டு 23, மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.
செப்டம்பர் 1, நீட்டிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
2020
செப்டம்பர் 2020 : 52 மாதங்களாகியும், இன்று வரை நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட முதன்மை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
2018-ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு, சுமார் 5,000 மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்காததால், மாணவர்கள் சிக்கீம், ராஜஸ்தான், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று, தேர்வு எழுத வேண்டிய சூழல் நிலவியது. இதில் கேரள மாநிலத்துக்கு மகனை தேர்வு எழுத அழைத்துச் சென்ற கிருஷ்ணசாமி என்பவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்வை முடித்து வெளியே வந்த மாணவனுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.
மேலும், ப்ளஸ் டூ தேர்வில் மூன்று, நான்கு பாடங்களில் சென்டம் வாங்கியவர்கள்கூட, நீட் தேர்வில் சாதிக்க முடியாமல் கண்ணீர் விட்ட சோகமும் நிகழ்ந்தது. பல கிராமப்புற மாணவர்கள், நமக்கெல்லாம் எதுக்கு இந்த ஆசை என்று, தங்கள் கனவையே தூக்கி எறிந்து விட்டனர். மேலும், அனிதாவை தொடர்ந்து பிரதீபா, சுபஸ்ரீ, ஏஞ்சலின் சுருதி, தனலட்சுமி என கனவுகளை தொலைத்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்த அவலம் என்று முடியும் என்று, விடியலுக்காக அநேகர் காத்திருக்கின்றனர்.
நீட் தேர்வு செல்லாது என்ற தீர்ப்பை திரும்பப்பெற்ற அரசியலமைப்பு சட்ட அமர்வு தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். ஆனால், அந்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள் அனில் தவே, ஏ.கே சிக்ரி, ஆர்.கே.அக்ரவால், ஏ.கே.கோயல் ஆகிய நான்கு நீதிபதிகள் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர். ஐந்தாவது நீதிபதியான ஆர்.பானுமதியும் அண்மையில் ஓய்வு பெற்று விட்டார். இதுவரை முதன்மை வழக்கு விசாரணைக்கு வரவில்லை. இதற்கிடையில், பல சோகங்களும் அரங்கேறி முடிந்து விட்டது.