சிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இ-பாஸ் வழங்குவதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள், மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, அவர் கூறியதாவது,
திண்டுக்கல் மாவட்டத்தின் பிரதானத் தொழில் வேளாண்மை. மேலும், இங்கு 41 நூற்பாலைகள் உள்ளதாகவும், அதில் சுமார் 18 ஆயிரம் நபர்கள் பணிபுரிவதாகவும் தொழில் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் வைத்துள்ள பல்வேறு கோரிக்கைகள் அரசால் பரிசீலிக்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ள, தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் ஏற்படுகின்ற சிரமங்களைக் களைவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். குறு, சிறு தொழில்கள் நடத்துவதிலுள்ள சிக்கல்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்படும். இ-பாஸ் வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாதவாறு தெளிவான உத்தரவை அரசு வழங்கியுள்ளது.
தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற அனைவருடைய பெயரையும், முகவரியையும் எழுதிக் கொடுத்தால் உடனடியாக அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அடையாள அட்டை கொடுப்பார்கள், அதை காண்பித்து நீங்கள் தொழிற்சாலைகளுக்கு வரலாம். மாதம் ஒருமுறை அதை புதுப்பித்தால் போதும். சிறு தொழில் புரிபவர்களுக்கும் அதேபோலத்தான். இங்குள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் தமிழகத்தில் பணியாற்ற விரும்பினால் அவர்களை தாராளமாக அழைத்து வரலாம்.
அவர்கள் குறித்த விவரங்களை அளித்தால், மாவட்ட ஆட்சித்தலைவர் இ-பாஸ் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வார். மேலும், அவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனை செய்து, பாசிட்டிவ் என்றால், அரசால் சிகிச்சை அளிக்கப்படும், இல்லையென்றால், நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பணி வழங்கலாம். அதேபோல, இன்னும் பல்வேறு கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள்.அரசு உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என அவர் பேசினார்.