பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 45 ரூபாய்க்கு இன்று முதல் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதற்கான விற்பனையை தொடங்கி வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
தமிழகத்திற்கு கா்நாடகம், ஆந்திரா, மராட்டியம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், தற்போது அங்கு பெய்து வரும் தொடர்மழை காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை கிடுகிடுவென அதிகரித்து வந்தது.
தற்போது உள்ள சூழலில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, ரூ.20 முதல் ரூ.30 வரை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பண்டிகை காலங்களில் வெங்காயத்தின் தேவை அதிகரிக்கும் என்பதாலும், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இன்று முதல் சென்னையில் பசுமைப் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில், ஒரு கிலோ பெரிய வெங்காயத்ம் 45 ரூபாய்க்கு விற்கப்படும் எனவும், நாளை முதல் தமிழகம் முழுவதும் பசுமைப் பண்ணை கடைகளில் வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில், ஒரு கிலோ வெங்காயம் ரூ.45 என்ற விற்பனை திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார். மேலும், தற்போது எகிப்து நாட்டில் இருந்தும் 135 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்ட, கோயம்பேடு சந்தைக்கு வந்தடைந்துள்ளது.