தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் இன்று ஒரே நாளில் 6 பேர் மரணமடைந்து இருக்கின்றனர்.
கடந்த ஆண்டு நாட்டில் பரவிய கொரோனா என்னும் கொடிய வைரஸ் இன்னும் மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது. வயதானவர்கள், குழந்தைகள் என உயிர்பலி வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனா மெல்ல மறைந்து வருகிறது என்று எண்ணி இருந்தோம். ஆனால் இது விஸ்வரூபம் எடுத்து மீண்டும் பரவி வருகிறது. தமிழகத்தில் இன்று புதிதாக 682 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.
6 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் இன்று ஒரே நாளில் 869 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,26,943 ஆகும். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 07 744 ஆகும். கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக கோவிஷீல்டு எனும் மருந்து பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. சீரம் நிறுவனத்திடம் இருந்து 1 கோடி கோவிஷீல்டு மருந்துகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டு இருக்கிறது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் இந்த கோவிஷீல்டு மருந்தை தயாரிக்கிறது. நாடு முழுவதும் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் செலவை அரசே ஏற்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்பட இருக்கிறது. ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.