தஞ்சாவூரில், மின்கம்பி மீது பேருந்து உரசிய விபத்தில் நான்கு பேர் பலியான சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, டான்ஜெட்கோ தலைவர் மற்றும் தஞ்சாவூர் கண்காணிப்பு பொறியாளருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து, தஞ்சாவூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து, வரகூர் அருகே எதிரில் வந்த லாரிக்கு வழி விட, சாலையில் இருந்து கீழிறங்கிய போது, தாழ்வாக தொங்கிய மின்கம்பி மீது உரசி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த கல்யாணராமன், கவுசல்யா, கணேசன், நடராஜன் ஆகிய நான்கு பேர் மின்சாரம் தாக்கி பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருக்கும், தஞ்சாவூர் கண்காணிப்பு பொறியாளருக்கும் மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.