கோவையில் நாளை 3 வது மெகா தடுப்பூசி முகாமிற்கு 439 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த 12 மற்றும் 19ம் தேதிகளில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முதல் முகாமில், ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 685 நபர்களுக்கும், இரண்டாவது முகாமில் 94 ஆயிரத்து 723 நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாளை மாவட்டம் முழுவதும் 3வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. 439 மையங்களில் ஒரு லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது.
கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊரக பகுதிகளில், 116 முகாம்களும், பேரூராட்சி பகுதிகளில், 129 முகாம்களும், வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் மொத்தம், 43 முகாம்களும் மாநகராட்சி பகுதிகளில், 151 தடுப்பூசி முகாம்களும் நடத்தப்படுகிறது.