தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குள் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
விமான நிலைய விரிவாக்கம்
தூத்துக்குடி விமான நிலைய விரிவாகத்துக்கு 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் 106 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக கூறியிருக்கிறார்கள். அதையும் விரைவில் எடுத்துக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கோவில்பட்டி, கயத்தாறு, புதூர், விளாத்திகுளம் வட்டாரங்களை சேர்ந்த 248 ஊரக குடியிருப்புகளுக்கான ரூ.94.04 கோடி மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் வரும் டிசம்பர் மாதம் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
புதிய தொழிற்சாலைகள்
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.995 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 60 எம்எல்டி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் ஆலை ரூ.634 கோடியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல கோடி மதிப்பீட்டில் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பல புதிய தொழிற்சாலைகள் தூத்துக்குடியில் அமையவுள்ளன.
தாமிரபரணி உபரிநீர்
தாமிரபரணி ஆற்றில் செல்லும் உபரி வெள்ளநீரை நீரேற்றம் திட்டத்தின் மூலம் உப்பாறு, மலட்டாறு, கல்லாறு, வைப்பாறு நதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டம் ரூ.264 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். தாமிரபரணி ஆற்றில் வெள்ளக்காலங்களில் வரும் உபரிநீரை சீவலப்பேரி தடுப்பணையில் இருந்து 40 மீட்டர் உயரத்துக்கு நீரேற்றம் செய்து 12.5 கி.மீ. தொலைவில் உள்ள பூவாணி, கொசவன்குளம் பகுதிக்கு கொண்டு சென்று, அங்கிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவுக்கு புதிய கால்வாய் அமைத்து உப்பாறு, மலட்டாறு, கல்லாறு, வைப்பாறு வரை கொண்டு சென்று முத்தலாபுரம் பகுதியில் இணைக்கப்படும். இதன் மூலம் தாமிரபரணி ஆற்றில் கடலில் வீணாக கலக்கும் 173 மில்லியன் கன அடி நீரை பாசனத்துக்கு பயன்படுத்தலாம்.
மினி கிளினி்க்
தமிழ்நாடு முழுவதும் 2000 மினி கிளினிக் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஒருவொரு தொகுதிக்கும் 5 அல்லது 6 மினி கிளினிக் திறக்கப்படும். இவை மாலை நேரத்தில் செயல்படும். இன்னும் ஒரு மாதத்தில் இது தொடங்கப்படும்
வீரமாமுனிவருக்கு தூத்துக்குடி, காமநாயக்கன்பட்டி பரலோக மாதா ஆலய வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் முழு உருவ சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.