சிஸ்டம் சரிஇல்லை, அரசியலில் மாற்றம் கொண்டு வந்தே தீருவேன் என அறிவித்திருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினியின் வருகை அரசியல் களத்தில் இருக்கும் கட்சிகளுக்கு பாதிப்பை கொடுக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தது காத்திருந்தனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ரஜினியின் அரசியல் வருகை குறித்த பேச்சுக்களும் அதிகமானது. தன் பட பாடல்களிலும், பேட்டிகளிலும் அரசியலுக்கு வருவேன், அரசியலுக்கு வருவது உறுதி கூறி வந்தவர், ஒருவழியாக டிசம்பர் 31ஆம் தேதி கட்சியின் பெயரை அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். நீண்ட காலமாகமாக காத்திருந்த அவரது ரசிகர்களும் இந்தமுறை நிச்சயம் நம் தலைவன் வந்துவிடுவார் என்று 31ஆம் தேதியை ஆவலுடன் நோக்கிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த ரஜினி, படக்குழுவில் உள்ளவர்களுக்கு கொரனோ பாதிப்பு இருக்க, தானும் பரிசோதனை செய்து கொண்டார். அப்பொழுது மருத்துவர்கள் ரஜினியின் உடல்நிலை குறித்து எச்சரித்தனர். இந்த நிலையில் அரசியல், கட்சிகூட்டம், பரப்புரை என்று சென்றால் தன் உடன் இருப்பவர்களுக்கும் கொரனோ பாதித்துவிடும் என கருதிய ரஜினி ஒரு முக்கிய முடிவை எடுத்தார். அவரது ரசிகர்களின் இத்தனை வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ரஜினி முடிவை அறிவித்ததில் இருந்தே அதை ஏற்காமல், ரசிகர்கள் பலரும் அவரின் வீட்டின் முன்பு திரண்டு, அரசியலுக்கு மீண்டும் வருமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.
ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி போராட்டம் நடத்த போவதாக, கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. காவல் துறையின் அனுமதி பெற்று இன்று அறவழியில் போராட்டம் நடந்து வருகிறது.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் யாரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ரஜினி இதுவரை போராட்டம் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கட்சி ஆரம்பிக்கவில்லை என்ற அறிவிப்புக்கு பிறகு, ரஜினி பத்திரிக்கையாளர்களை சந்திக்கவேயில்லை. புத்தாண்டு வாழ்த்து பற்றியும் அறிக்கை எதுவும் வெளிவரவில்லை. போயஸ் காடர்ன் கேட் திறக்குமா?
ஒருவர் தன் உடல்நிலை காரணத்தால் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்த பிறகும், அவரை மீண்டும் வருமாறு வலியுறுத்துவது சரியா? ரசிகர்களாகவே இருந்தாலும், வரமாட்டேன் என்று அறிவித்த பிறகு, மீண்டும் வலியுறுத்தி போராட்டம் நடத்துவது ரஜினிக்கு அழுத்தம் கொடுப்பது போல் இருக்காதா?