தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள பன்னம்பாறையில் ஏழு அண்ணன்மார்களால் கௌரவக்கொலை செய்யப்பட்டவள் தான் மாடத்தி அம்மன்.
தூத்துக்குடி மாவட்டம் பன்னம்பாறை கிராமத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு முருகேச பாண்டியன் மற்றும் முத்துப்பேச்சி தம்பதியருக்கு மொத்தம் ஏழு ஆண் பிள்ளைகள், பல வருடங்களாக தங்களுக்கு ஒரு பெண் பிள்ளை வேண்டும் என்று தங்கள் குல தெய்வம் சுடலை மாடனை வழிப்பட்டு வந்தனர். அவர்களுக்கு மாடனின் அருளால் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது, அந்த குழந்தைக்கு மாடத்தி என்று பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தனர்.
மாடத்தியின் பத்து வயதிற்குள்ளேயே தாய் தகப்பன் இருவருமே தவறி விட்டனர். அதன் பிறகு மாடத்தி தன் அண்ணன்கள் மற்றும் அண்ணிகளால் மிகவும் பாசத்துடனும் அரவணைப்புடனும் வளர்க்கப்பட்டாள்.
மாடத்தியின் மூத்த அண்ணன் கந்தையா பாண்டியன் தன் அப்பாவிற்கு பிறகு ஊர் நாட்டாமை பொறுப்பை வகித்து வந்தார். அப்போது பன்னம்பாறை கிராமத்தை சேந்தவருக்கும் பக்கத்து ஊரான பூச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவருக்கும் இடையே நடந்த பிரச்சனையின் போது கந்தையா பாண்டியன் பன்னம்பாறை கிராமத்தை சேந்தவருக்கு ஆதரவாக தீர்ப்பு கூறியதால் சிறிது மனக்கசப்பு உருவானது.
இந்நிலையில் மாடத்தி பருவம் அடைந்ததும் பூச்சிக்காடு கிராமத்தை சேர்ந்த அருணாச்சலதேவர் தன் மகனுக்கு பெண் கேட்டு வந்தார். கந்தையா பாண்டியன் மாடத்திக்கு ஒரு வருடத்திற்கு பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும் என ஜாதகத்தில் கூறியிருப்பதாக கந்தையா பாண்டியன் கூறிவிட்டார். அந்த ஒரு வருடத்திற்குள் இரு ஊருக்கும் இடையே பல பிரச்சனைகள் வந்துவிட்டதால் இனி மாடத்தியை அருணாச்சலதேவர் மகனுக்கு திருமணம் செய்து வைப்பது சரியாக இருக்காது என நினைத்து ஒட்டன் புதூர்க்குளம் ஊரை சேர்ந்த செல்லப்பாண்டிக்கு திருமணம் செய்து வைத்தார். இதனால் பூச்சிக்காட்டாருக்கு கந்தையா பாண்டியன் குடும்பத்தினர் மீது மேலும் பகை வளர்ந்தது.
மாடத்தியும் செல்லபாண்டியனும் அன்போடு இல்லறம் நடத்தி வந்தனர் இவர்களுக்கு சுடலை மாடன் என்ற மகனும் இசக்கி என்ற மகளும் பிறந்தனர். சில ஆண்டுகளுக்கு பிறகு செல்லப்பாண்டியன் பொருள் ஈட்டுவதற்காக கொழும்பு சென்றான். அதன் பிறகு மாடத்திக்கு தன் மாமியாரோடு ஒத்து போகாததால் அண்ணன்களிடம் திரும்பி வந்தால் அவர்களும் மாடத்தியை நன்றாகவே பார்த்து கொண்டனர்.
ஒரு முறை குடும்பத்தோடு மாசி திருவிழாக்கு சென்று இருந்த போது குழந்தைகள் ராட்டினத்தில் ஆட வேண்டும் என்று கேட்டதால் மாடத்தி குழந்தைகளை அழைத்து சென்றாள். ராட்டு வேகமாக ஆடியதால் குழந்தை பயந்து அலறியது எனவே மாடத்தி ராட்டை நிறுத்த சொல்லி குழந்தையை தூக்கி கொண்டாள். இந்த நிகழ்வை பூச்சிக்காட்டை சேர்ந்தவர்கள் பார்த்து கொண்டனர்.
ஒரு முறை சாத்தான்குளத்தில் நடந்த பஞ்சாயத்தின் போது கந்தையா பாண்டியன் பூச்சிக்காட்டாருக்கு எதிராக தீர்ப்பு கூறியதால் ஆத்திரப்பட்டு அவர்கள் “நீ இப்படி ஊர் நியாயம் சொல்லி கொண்டிருக்க்கிறாய் உன் தங்கச்சி உன் வீட்டு மானத்தை வாங்கி கொண்டிருக்கிறாள் அதற்க்கு என்ன செய்ய போகிறாய்” எனக் கேட்டனர் கோபத்துடன் கத்திய கந்தையா பாண்டியனிடம் மாடத்தி யாரோ ஒருவனுடன் இணைந்து மாடத்தி ராட்டு ஆடியதாக பழி சுமத்தினர். சிறிதும் யோசிக்காமல் அவர்கள் கூறியதை நம்பினர்.
இரவெல்லாம் இதைப்பற்றி யோசித்த அண்ணன்மார்கள் ஏழு பேறும் விடியற்காலையில் மாடத்தியை எழுப்பி விறகு வெட்ட எங்களுடன் வா என கூறிவிட்டு முன்னமே சென்றனர். அங்கு ஏழு பேறும் மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு மாடத்தி விறகு எடுக்க ஏதுவாக காய்ந்த கிளைகளை வெட்டி போட்டனர். மாடத்தி வந்ததும் விறகுகளை எடுக்க குனிந்த போது கந்தையா பாண்டியன் கீழே குதித்து அவள் தலையை வெட்டி விட்டு அவர்கள் சொன்னதை மிகவும் கோபத்துடன் கூறினான். அப்போது உடலை விட்டு தனியாக வீழ்த்தப்பட்ட மாடத்தியின் தலை பேசியது “இப்படி அடுத்தவன் சொன்னதை நம்பி என்னை வெட்டி விட்டிர்களே என் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் என்ன பதில் சொல்வீர்கள்? உங்கள் ஏழு பேரில் ஒருவருக்கு கூட என்னை காப்பாற்ற வேண்டும் என்று தோன்றவில்லையா? இனி உங்கள் குலம் நாசமாக போகட்டும்” என சபித்தாள். தலையற்ற அவளது உடலிலிருந்து கைகள் மண்ணைவாரி தூற்றியது.
அதிலிருந்து பதினாறாம் நாள் அவளது மூத்த அண்ணன் இறந்தான். மாடத்தியை தவறாக பேசியவர்கள் மட்டுமின்றி பூச்சிக்காடே அழிந்தது. மாடத்தியின் குடும்பத்திலும் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். இதனால் அவளை சாந்தம் அடையச்செய்யும் பொருட்டு அவளது வாரிசுகள் பன்னம்பாறையில் அவளுக்கென்று கோவில் எழுப்பி திருவிழா நடத்துகின்றனர். மாடத்தியும் அம்மனாக எழுந்தருளி அருள் பாலித்துக் கொண்டிருக்கிறாள்.