சென்னையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் அதிகபட்சமாக அரை மணி நேரம் கூட நின்று பெய்யாத அளவுக்கு தான் மழை வந்து கொண்டிருந்தது.
அதுபோல சாதாரண மழையாக இன்று அதிகாலை ஆரம்பித்தது தான் மூன்று மணி நேரத்திற்கு தொடர்ந்து பெய்யும் என்ற வானிலை அறிக்கையுடன் நம்மை அதிர வைத்தது.
வான் பார்த்த பூமிக்கு மழை வருவது ஏற்புடையது தான் என்றாலும் இங்கு கொட்டி தீர்க்கும் மழையில் பெரும் பகுதி வீணாகுவது வேதனையை அளிப்பதுடன் மழையை வரவேற்கும் மனநிலையையும் மாற்றி விடுகிறது.
ஆறுகளில் ஏரிகளில் வெள்ளப்பெருக்கு என்றால் ஒப்புக்கொள்ளலாம் ஆனால் இங்கு சாலைகளில் அல்லவா வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
‘தமிழகத்தின் தலைநகரம்’ ‘வந்தாரை வாழ வைக்கும் சென்னை’ என்று பெருமைப்படுத்தப்படும் சென்னையின் அவல நிலை என்னவென்றால் 1 மணி நேரம் ஓங்கி அடித்து மழை பெய்தாலே தலைநகர் தத்தளித்து விடும்.
2015ஆம் ஆண்டு வந்த மழை வெள்ளத்தை யாராலும் மறந்து விட முடியாது. பணக்காரன் பாமரன் என்ற எந்த வேறுபாடும் இன்றி அழையா விருந்தாளியாகவே அத்தனை பேர் வீட்டுக்குள்ளும் குடி புகுந்தது மழை நீர்.
கனரக வாகனங்கள் கம்பீரமாக சென்ற மாநகரங்களின் சாலைகளில் மீட்பு பணிக்கு படகு சென்றது.
நாகரீக வளர்ச்சி எத்தனை அடைந்தாலும் இயற்கையுடன் இயைந்து வாழ் என்று நம்மை மிரட்டி விட்டு சென்றாலும் அதிலிருந்து சற்றும் ஒரு பாடம் அறியாமல் இன்று மீண்டும் தத்தளிக்க தயாராகி கொண்டிருக்கிறோம்.
யாரை குறை கூறுவது ஐந்து வருடத்திற்கு முன்பு பட்ட அடியிலிருந்து மீண்டு அதற்கான முன்னெச்சரிக்கை எடுக்காத அரசாங்கத்தையா? இல்லை அரசாங்கத்தை ஏமாற்றி ஆறுகளையும் ஏரிகளையும் ஆக்கிரமித்து அலங்காரமாய் வீடு கட்டி கொள்ளும் நம்மை போன்ற மக்களையா?
நம்முடன் இயற்கையும் சற்று விளையாடி தான் பார்க்கிறது. மூன்று நாட்கள் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் மாதங்களில் பெய்ய வேண்டிய பருவ மழை பத்தே நாட்களிலும் என நவநாகரீக மனிதர்களை கேலி செய்து கொண்டு தான் இருக்கிறது.
மழைக்கு முன்னாள் மக்களை காக்க வேண்டிய அந்தந்த துறைகளின் பொறுப்புக்கள் என்ன ஆயிற்று?
மழை நீர் ஓடி கடலில் கலக்க வேண்டிய பாதைகளின் மேலே சாலைகளையும் வீடுகளையும் காட்டியது யார் தவறு?
காடுகளை அழித்து விட்டு ஊருக்குள் வரும் வனவிலங்குகளை சுட்டு கொள்கிறோம், ஆறுகளையும் ஏரிகளையும் ஆக்கிரமித்து விட்டு மழை வெள்ளம் வீட்டை சூழ்ந்து விட்டது என்று குறை கூறுகிறோம்.
மற்ற ஆண்டுகளாவது பரவாயில்லை டிசம்பர் மாதத்தின் மீது பழி சுமத்தி தப்பித்து கொண்டிருந்தோம். இந்த ஆண்டு தொடக்கமே நமக்கு டிசம்பர் மாதம் போல் ஆகி விட்டது மார்ச் மாதத்தில் ஆரம்பித்த தொற்று இன்றும் குறைந்த பாடில்லை.
இந்நிலையில் கொரோனாவுடன் சேர்ந்த வெள்ளம் என்றால் எதிலிருந்து நம்மை முதலில் காப்பாற்றிக்கொள்வது? இருக்கவே இடம் இல்லை என ஆகும் போது தனி மனித இடைவெளிக்கு நாம் எங்கே போவது?
இருக்கும் காலத்தில் எல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புகார் எண்களை கொடுப்பதில் என பலன் இருக்கிறது?
போகும் உயிரை பிடித்து வைக்கும் அறிவியலுக்கு கூட இயற்கையை கட்டுப்படுத்த முடியாது என்பது நிதர்சனமான உண்மை.
இயற்கையை அளிக்கும் போது அதில் பெரிதும் பாதிப்படைவது மனித இனமே.
இன்றைய மழை நம்மை சற்று பின்னோக்கி 2015ஆம் ஆண்டு வெள்ளத்தை நினைவுபடுத்துகிறது.
கொரோனா தொற்றுக்காலத்தில் மழை வெள்ளம் என்பது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும்.
எதுவும் நடந்த பிறகு மீட்பு பணிகளை சிறப்பாக செய்து முடிப்பதை விட வரும் முன் காத்தால் பல பேரழிவுகளை தடுக்க முடியும்.
நாட்டின் எவ்வளவு பெரிய பிரச்சனைகளையும் மிக எளிதாக சிரிக்கும்படி மக்களிடம் கொண்டு செல்வது நெட்டிசன்களால் மட்டுமே முடியும். இன்றைய மழையில் சென்னையின் நிலை பற்றி சிறப்பாக நம் மீம்ஸ் கிரியேட்டர்கள் பகிர்ந்து இருக்கிறார்கள், அதில் சில உங்கள் பார்வைக்கு: