இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலூன்றுவதற்கு முக்கியமான களமாகச் சென்னை அமைந்திருந்தது. 1653ல் சென்னைப்பட்டினம் சென்னை மாகாணமாக மாறியது.சென்னை மாகாணம் கடலோர ஆந்திரத்தையும் தமிழகத்தையும் கேரளத்தையும் உள்ளடக்கி உருவானபோது அதன் தலைநகரமாக ஆகியது. இன்றும் சென்னையின் முகம் என்பது இவ்விரண்டும் தான். துறைமுகத்தை மையமாகக் கொண்ட வணிகம். கோட்டையை மையமாகக் கொண்ட அதிகாரம்.
1702ல் முகலாயர்களாலும், 1741ல் மராட்டியர்களாலும் சென்னை மாகாணம் தாக்குதலுக்கு உள்ளானது. 1746ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் கைவசமானது. பின்னர் ஆங்கிலேயர்களின் கைக்குப் போனது. 1758ல் மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர். ஆனால், இரண்டு மாதங்களிலேயே ஆங்கிலேயர்கள் சென்னையைத் திரும்பவும் மீட்டனர். அன்று முதல் 1947ம் ஆண்டு வரை சென்னை மாகாணம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.
கம்பெனியின் வியாபாரம் பெரும்பாலும் துணி சார்ந்ததாக இருந்ததால், அதற்கு தேவையான ஆட்களை மெட்ராசில் குடியேற்றம் செய்யும் பணிகள் தொடங்கின. நெசவாளர்களை ஊக்குவிப்பதற்காக கம்பெனி செலவிலேயே வீடு கட்டிக் கொடுக்கப்பட்டு, அங்கேயே பரம்பரை பரம்பரையாக வாழ அனுமதியும் வழங்கப்பட்டது. இதனால் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் மெட்ராஸ் நோக்கி படையெடுத்தனர். இப்படித்தான் வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, காலடிப்பேட்டை போன்ற புதிய பகுதிகள் உருவாகின.
ஏற்கனவே இருந்த எழும்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் போன்ற கிராமங்கள் 1693 ஆம் ஆண்டு சென்னையுடன் இணைக்கப்பட்டன. மெட்ராஸ் மெல்ல ஒரு நகரமாக உருமாற ஆரம்பித்ததும், துணி வியாபாரத்தை தாண்டி மற்ற வியாபாரங்களும் சூடிபிடித்தன.
மெட்ராஸ் வர்த்தக சபையினர் துறைமுகம் வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக வைத்தனர். இதன் பயனாக 1881ல் பெரிய கப்பல்கள் துறைமுகத்திற்குள் வர தொடங்கின.
கிழக்கிந்திய கம்பெனியார் மெட்ராசில் கோட்டை கட்டி குடியேறிவிட்டாலும், ஆரம்ப காலத்தில் அவர்களிடம் சரியான தபால் முறைகள் எதுவும் இல்லை. 1736ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதிதான் இதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது.1774இல்தான் முதன்முறையாக தனியார் கடிதங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஒரு கடிதம் எத்தனை மைல்கள் பயணப்படுகிறது என்பதை வைத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக இப்போது நாம் ஸ்டாம்ப் பயன்படுத்துவது போல, அந்த காலத்தில் செப்பு வில்லைகளை கடிதத்தின் மீது ஒட்டி அனுப்புவார்கள்.
1785ஆம் ஆண்டு தபால் அலுவலகத்திற்கான விதிமுறைகள் திருத்தப்பட்டன. அடுத்த ஆண்டு மெட்ராசில் இருந்து பம்பாய், கல்கத்தா ஆகிய நகரங்களுக்கு கடிதங்களை கொண்டு செல்லும் மெயில் சேவை தொடங்கப்பட்டது. இதேஆண்டில்தான் மெட்ராஸ் ஜெனரல் போஸ்ட் ஆபிஸ் தொடங்கப்பட்டது. அப்போதைய மெட்ராஸ் ஆளுநரின் உதவியாளரான கேம்ப்பெல் என்பவர் முதல் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். தலைமைத் தபால் நிலையம் முதலில் கோட்டைக்குள் செயல்பட்டு பின்னர் பிராட்வே போய் இறுதியாக தற்போதைய இடத்தை வந்தடைந்தது.
மெட்ராசில் கடிதப் போக்குவரத்து அதிகரித்ததை அடுத்து தபால் நிலையத்திற்கென தனியாக ஒரு பெரிய கட்டடம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்காக 1884இல் ஒருவழியாக கடற்கரைச் சாலையில் மொத்தம் 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் பிரம்மாண்டமான மூன்று மாடி தபால் நிலைய கட்டடம் கட்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை மெட்ராஸ் மாநகரின் மிக அழகிய கட்டடங்களில் ஒன்றாக இந்த இந்தோ-சராசனிக் பாணி கட்டடம் திகழ்ந்து வருகிறது.
1853ஆம் ஆண்டு மெட்ராசில் இருந்து ரயில் மூலம் கடிதங்களை அனுப்பும் முறை தொடங்கியது. அதற்கு அடுத்த ஆண்டுதான் முதன்முதலில் மெட்ராசில் தபால் தலை அறிமுகப்படுத்தப்பட்டது. 1864ஆம் ஆண்டு மெட்ராஸ் மாநகரில் மொத்தம் 9 தபால் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. 1870-1880 காலகட்டத்தில் பல புதிய விஷயங்கள் தபால் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டன. அலுவலக கடிதங்களுக்கு அதிக கட்டணம், வி.பி.தபால்கள், மணியார்டர் போன்றவை நடைமுறைக்கு வந்தன.
1872இல் கப்பல் மூலம் 15 நாட்களுக்கு ஒருமுறை மெட்ராசில் இருந்து பர்மாவின் ரங்கூன் நகருக்கு கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டன. 1886இல் மெட்ராசில் இருந்து இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள துறைமுகங்களுக்கு இதேபோன்ற சேவை தொடங்கியது.
1915ஆம் ஆண்டு வரை, மெட்ராஸ் மாநகரில் குதிரை வண்டிகள் மூலம் தான் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்பட்டன. பின்னர் சோதனை முறையில் இரண்டு மோட்டார் வாகனங்கள் தபால் துறைக்கு வழங்கப்பட்டன. அவை அதிக பயன் அளித்ததால், 1918ஆம் ஆண்டு குதிரைகளின் இடத்தை மோட்டார் வாகனங்கள் முழுமையாக பிடித்துக் கொண்டன.
1768 ஆம் ஆண்டு 117 ஏக்கர் நிலம் தனியாரிடம் இருந்து வாங்கப்பட்டு, சேப்பாக்கம் அரண்மனை ஆற்காடு நவாப் மூலம் கட்டப்பட்டது. நவாப் தனது மெகா குடும்பத்துடன் வாழ்ந்து வந்த இதுதான் பின்னாட்களில் பிரபல கட்டட பாணியாக மாறிய இந்தோ-சராசனிக் பாணியில் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கட்டடம். ஒருகாலத்தில் அரண்மனைக்கு விருந்தினர்கள் வந்தால் அவர்களை துப்பாக்கி குண்டுகள் முழங்க வரவேற்ற மைதானத்தில், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் செனட் இல்லம் கட்டப்பட்டுவிட்டது. அதேபோல நவாப்பின் நீச்சல் குளமும் இடிக்கப்பட்டு பல்கலைக்கழக கட்டடங்கள் முளைத்துவிட்டன.
1768 ஆம் ஆண்டு 117 ஏக்கர் நிலம் தனியாரிடம் இருந்து வாங்கப்பட்டு, சேப்பாக்கம் அரண்மனை ஆற்காடு நவாப் மூலம் கட்டப்பட்டது. நவாப் தனது மெகா குடும்பத்துடன் வாழ்ந்து வந்த இதுதான் பின்னாட்களில் பிரபல கட்டட பாணியாக மாறிய இந்தோ-சராசனிக் பாணியில் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கட்டடம். ஒருகாலத்தில் அரண்மனைக்கு விருந்தினர்கள் வந்தால் அவர்களை துப்பாக்கி குண்டுகள் முழங்க வரவேற்ற மைதானத்தில், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் செனட் இல்லம் கட்டப்பட்டுவிட்டது. அதேபோல நவாப்பின் நீச்சல் குளமும் இடிக்கப்பட்டு பல்கலைக்கழக கட்டடங்கள் முளைத்துவிட்டன.
நவாப் வாலாஜாவால் சேப்பாக்கம் அரண்மனை வளாகத்தில் தொடங்கப்பட்ட இஸ்லாமிய பள்ளி, பேகம் காலத்தில் அவரது உம்தா பாக் மாளிகைக்கு மாற்றப்பட்டது. அதுதான் இன்றும் மவுன்ட் ரோட்டில் இயங்கி வரும் மதராஸா-இ-ஆஸாம் பள்ளி.
1794 இல் சென்னை மாகாணத்தின் முதல் பொறியியல் கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது.மேற்கத்திய வகைக் கல்வியளிக்கும் பள்ளிகள் 18ம் நூற்றாண்டில் சென்னை மாகாணத்தில் தொடங்கப்பட்டன. 1840 ம் ஆண்டு எழும்பூரில் ஒரு வாடகைக் கட்டடத்தில் பிரசிடென்சி பள்ளி தொடங்கப்பட்டது. 1841ல் பிரசிடென்சி பள்ளி உயர்நிலைப் பள்ளியாக மாறியது. 1853ல் பிரசிடென்சி கல்லூரியாக உயர்ந்தது. 1857ல் சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது, அதன் கீழ் இந்தக் கல்லூரி இணைந்தது.
1794 இல் சென்னை மாகாணத்தின் முதல் பொறியியல் கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது.மேற்கத்திய வகைக் கல்வியளிக்கும் பள்ளிகள் 18ம் நூற்றாண்டில் சென்னை மாகாணத்தில் தொடங்கப்பட்டன. 1840 ம் ஆண்டு எழும்பூரில் ஒரு வாடகைக் கட்டடத்தில் பிரசிடென்சி பள்ளி தொடங்கப்பட்டது. 1841ல் பிரசிடென்சி பள்ளி உயர்நிலைப் பள்ளியாக மாறியது. 1853ல் பிரசிடென்சி கல்லூரியாக உயர்ந்தது. 1857ல் சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது, அதன் கீழ் இந்தக் கல்லூரி இணைந்தது.
மெட்ராசில் கல்விப்பணியில் ஆங்கிலேயர்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தான், தைரியமாகக் களம் இறங்கினார், பச்சையப்ப முதலியார். தென்னிந்தியாவிலேயே ஆங்கிலேயரின் நிதி உதவி இல்லாமல் முதல் கல்வி நிலையத்தைத் தொடங்கினார். 1842ல் பச்சையப்பன் கல்லூரி உதயமானது. 1857 ஆம் ஆண்டில் மெட்ராஸ், கல்கத்தா,பாம்பே ஆகிய பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. பல்கலைக்கழகத்தில் இருக்கும் செனட் இல்லம் இந்தியாவின் சிறந்த இந்தோ-சராசனிக் கட்டடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே மெட்ராசிற்கு வந்தது தான் மயிலாப்பூரில் உள்ள லஸ் தேவாலயம்.தற்போது காணப்படும் லஸ் தேவாலயம் 1516ல் பெத்ரோ தெ அடோங்கியா என்ற பாதிரியாரால் கட்டப்பட்டது. சென்னையின் முதல் தேவாலயமான இது,16ம் நூற்றாண்டு ஐரோப்பிய பாணியில் கூர்மாட அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதே போன்று போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட மற்றொரு புராதன தேவாலயம் மயிலாப்பூருக்கு அருகிலேயே இருக்கும் சாந்தோம் தேவாலயம். மெட்ராஸ் நகரம் உருவான புதிதில் கோட்டைக்குள் உருவான புனித மேரி ஆலயத்தில் தொடங்கி, மெட்ராசை விட்டு புறப்படுவதற்கு முன்பாக ஆங்கிலேயர்கள் கட்டி விட்டு போன ஒவ்வொரு கட்டடமும் இன்றும் அவர்களது வரலாறு பேசுகின்றன.
ஆங்கிலேயர்கள் சென்னையில் காலூன்றியதும், தங்களுக்கான தேவைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பூர்த்தி செய்து கொண்டே வந்தனர். அந்த வரிசையில் நோய்வாய்ப்பட்ட ஆங்கிலேயர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோட்டைக்குள் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அதேசமயம் கோட்டைக்கு வெளியில் இருக்கும் சென்னையின் பூர்வ குடிகளுக்கு மருத்துவம் பார்க்க நவீன மருத்துவர்கள் என்று யாரும் இல்லை. நாட்டு மருத்துவர்கள் தான் அவர்களின் நோய்களுக்கு மருந்து கொடுத்து வந்தனர். இதனால் அவர்களுக்கென ஒரு நவீன மருத்துவமனைக்கான தேவை மெல்ல உணரப்பட்டது. இந்த சூழலில்தான் 1781இல் மெட்ராசில் மிக மோசமான பஞ்சம் தலைவிரித்தாடியது. சென்னையின் சொந்த மக்கள் சோற்றுக்கு வழியில்லாமல் பரிதவித்தனர். இவர்களுக்கு உதவுவதற்காக இன்றைய ‘ஸ்டான்லி மருத்துவமனை’ இருக்கும் இடத்தில் ஒரு கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து கஞ்சி வாங்கி குடித்து தங்களின் பசியைப் போக்கிக் கொண்டனர்.
அடுத்த ஓராண்டில் இந்த இடம் ஒரு சத்திரமாக மாறியது. பின்னர் கிழக்கிந்திய கம்பெனி மருத்துவரான ஜான் அண்டர்வுட்டின் (John Underwood) முயற்சியால் இந்த இடத்தில் ஒரு சிறிய மருத்துவமனையும், தொழுநோயாளிகளுக்கான இல்லமும் தொடங்கப்பட்டது. 1799இல் தொடங்கப்பட்ட இதுதான் உள்ளூர்வாசிகளுக்கென பிரத்யேகமாக உருவான சென்னை மாநகரின் முதல் நவீன மருத்துவனை. இதனை உள்ளூர்வாசிகள் கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று அழைத்தார்கள்.
இராயபுரத்தில் தான் சென்னையின் முதல் ரயில் நிலையம் 1856 இல் அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்தி பார்க் டவுன் ரயில் நிலையம் ஹென்றி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது. சென்னையில் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் இரண்டுமே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை. எழும்பூர் ரயில் நிலையத்தை பொறுத்தவரை, எழும்பூர் ரெடோ என்ற பெயரில் அது ஒரு கோட்டையாக இருந்து வந்துள்ளது. இங்கு பிரிட்டீஷர், வெடிப் பொருட்களை சேமித்து வைத்ததாக கூறப்படுகிறது.
உலகின் மற்ற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி, சினிமா போன்ற விஷயங்கள் அடுத்த சில ஆண்டுகளிலேயே மெட்ராசிற்கு அறிமுகமாயின. மே 7, 1895இல் சென்னை நகர வீதிகளில் முதன்முறையாக எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடின. இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் டிராம் ஓடுவது அதுதான் முதல்முறை. அந்த சமயத்தில் லண்டன் போன்ற மாநகரங்களில் கூட எலெக்ட்ரிக் டிராம்கள் அறிமுகமாகவில்லை.ஆனால் சுமார் 100 ட்ராம் வண்டிகள், தங்க சாலை, பீச் ரோடு, மவுண்ட் ரோடு, பாரிஸ் கார்னர் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி வந்து கொண்டிருந்தன. 1895 முதல் 1953 வரை தனது சேவையை வழங்கிய இந்த ட்ராம் வண்டிகள், கால வெள்ளத்தில் சென்னையை விட்டு அடித்துச் செல்லப்பட்டன. இன்றைக்கு பெரியார் திடல் மற்றும் தினத்தந்தி அலுவலகம் இருக்கும் இடத்தில் தான் ட்ராம் வண்டிகளின் ஷெட் இருந்தது.
மெட்ராஸ் ஒய்.எம்.சி.ஏ., டேவிட் என்பவரால் 1890ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1919இல் மெட்ராஸ் வந்து சேர்ந்தார் ஹாரி க்ரோ பக் (Harry Crowe Buck). அடுத்த ஆண்டே எஸ்பிளனேட் கட்டடத்தில் இவர் ஒரு உடற்பயிற்சி பள்ளியை ஆரம்பித்தார். இடம் போதுமானதாக இல்லாததால், அடையாறு ஆற்றங்கரையில் சைதாப்பேட்டையில் 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு பரந்து விரிந்த இடத்தை பக் தேர்வு செய்தார். இப்படித்தான் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சிக் கல்லூரி உருவானது.
உலகின் பழமையான இனங்களில் ஒன்றாக கருதப்படும் பார்சி இன மக்களின் பங்களிப்பும் மெட்ராசின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியில் இருந்திருக்கிறது.பாரசீகத்தை அதாவது தற்போதைய ஈராக், ஈரானின் பூர்வீகமாகக் கொண்ட இவர்கல், ஜொராஷ்டிரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அரசியல் நெடிக்கடிகள் காரணமாக 1795ம் ஆம்டில் மெட்ரோஸ் மண்ணில் பார்சிகள் முதன்முதலில் காலடி எடுத்து வைத்தனர். பார்சி இன மக்கள் நெருப்பை கடவுளாக வழிபடுவார்கள். இதனால் இராயபுரத்தில் உருவாக்கப்பட்டது தான் பார்சிகளின் நெருப்புக் கோவில்.இந்த கோயில் பிறகு, பார்சி சமூகத்தவர்கள் சந்திப்பதற்கான இடமாகவும் மாறியது. தமிழகத்தில் உள்ள ஒரே நெருப்பு கோயிலான இங்கு 100 ஆண்டுகளைக் கடந்தும் நெருப்பு அணையாமல் எரிந்து கொண்டே இருக்கிறது.
சென்னையில், சிவப்பு நிறத்திலுள்ள, பிரசித்தி பெற்ற, பல கட்டடங்களை உருவாக்கிய கட்டட மேதை, தாட்டிகொண்ட நம்பெருமாள் செட்டியார் சொந்தமாக ரெயில் வைத்திருந்தார். கடந்த, 18ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்களுக்கு கிடைத்த, ‘பில்டிங்’ கான்ட்ராக்டரான இவரால் கட்டப்பட்டவை தான், பாரிமுனையில் உள்ள உயர்நீதிமன்றம், சட்டக்கல்லுாரி, எழும்பூரில் உள்ள சிற்பக்கலை கல்லுாரி, மியூசியம் மற்றும் கன்னிமாரா நூலகம். இவர் வாழ்ந்த வீடு, ‘வெள்ளை மாளிகை’ என்ற பெயரில், சேத்துப்பட்டு, மேம்பாலம் அருகில், மேத்தா மருத்துவமனையின் பின்புறம் உள்ளது. மூன்று மாடிகள், 30 அறைகள் கொண்ட இம்மாளிகை தற்போது, அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. எழும்பூர் பாந்தியன் சாலையிலிருந்து, ஹாரிங்டன் சாலை வரை உள்ள நிலப்பரப்பு, இவருக்கு சொந்தமாக இருந்தது. அதனால், அது, ‘செட்டியார் பேட்டை’ என, அழைக்கப்பட்டது.நாளடைவில், ‘செட்டிபேட்டை’ என மருவி, இன்று, ‘சேட்பெட்’ என மாறிவிட்டது.
ஆங்கிலேயர் பலருக்கு வீடு கட்டி தந்த நம்பெருமாள் செட்டியார், தன் சொந்த உபயோகத்துக்காக, நான்கு பெட்டிகள் கொண்ட தனி ரயில் வண்டி ஒன்றை வைத்திருந்தார்.தன் குடும்பத்தினரோடு திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்குச் சென்று வர, இந்த ரயிலை உபயோகித்தார்; மற்ற நேரங்களில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தான், இவருடைய ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
மெட்ராசின் பிரபலமான சைனா பஜார், பர்மா பஜார் போன்றவை எல்லாம் இன்றும் அவர்களை நினைவுப்படுத்துகின்றன. இதே போல் லிங்கி செட்டித் தெரு, தம்புச் செட்டித் தெரு, அங்கப்ப நாயக்கன் தெரு என இங்கிருக்கும் ஒவ்வொரு தெருவும் அன்றைய புகழ்பெற்ற தெலுங்கு வணிகர்களை நினைவுபடுத்துகின்றன. ராயப்பேட்டையில் இஸ்லாமியர்கள், பெரம்பலூரில் ஆங்கிலோ இந்தியர்கள் என மெட்ராஸ் மண்ணின் வரலாறு இங்கிருக்கும் ஒவ்வொருவர் மீதும் படிந்து இருக்கிறது.
சென்னையின் வரலாறில் நிச்சயம் பல்லாவர சந்தைக்கும் இடமுண்டு. 1815 ல் மாட்டுச் சந்தையாக தன் அடையாளத்தை தொடங்கிய பல்லாவர சந்தை இன்று மல்டி ஸ்பெஷாலிட்டி மார்கெட்டாக விளங்கி வருகிறது. சந்தை என்ற சொல்லுக்கு ஒரு புதிய படிமத்தை உருவாக்கிய பெருமை, சென்னை பல்லாவர சந்தைக்கு உண்டு. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய மட்டுமே பயன்படுத்தி வந்த இடத்தில் , பயன்படுத்திய பழைய பொருட்கள் முதல் புத்தம் புதிய பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. பல்வேறு விதமான மாற்றங்களை தனக்குள் உள்வாங்கிக் கொண்டு 200 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது இந்த பல்லாவர சந்தை.
மவுண்ட் ரோட்டில் இருக்கும் ஒவ்வொரு பாரம்பரிய கட்டடமும் ஒரு அருங்காட்சியகம் தான்.ஐ.நா சபையின் சாயலில் கட்டப்பட்டு இன்று எப்போது சாயும் எனத் தெரியாமல் நித்திய கண்டத்துடன் நின்று கொண்டிருக்கும் பாரத இன்ஷூரன்ஸ் கட்டடம் தான், மெட்ராஸ் மாநகரின் முதல் உயரமான கட்டடம் என சொல்லப்படுகிறது.
மவுண்ட் ரோடும், ஜெனரஸ் பேட்டர்ஸ் சாலையும் சந்திக்கும் இடத்தில் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் இந்தக் கட்டடம், ஸ்மித் (W.E.smith) என்ற மருந்து வியாபாரியால் கட்டப்பட்டது. 1897ல் தொடங்கப்பட்ட கார்டில் கட்டடத்தை (Kardyl building) வியாபாபார நஷ்டம் காரணமாக ஸ்மித் ஸ்பென்சர் நிறுவனத்திடம் விற்று விட்டார். இந்தக் கட்டடத்தை 1934ல் பாரத் இன்ஷூரன்ஸ் நிறுவனம் வாங்கியது. 1956ல் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் அரசுடமையாக்கப்பட்ட போது, நாட்டில் இருந்த பல காப்பீட்டு நிறுவனங்கள் அரசின் எல்ஐசி வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்படித்தான் எல்ஐசிக்கு சொந்தமாக இந்த கட்டடம் மாறியது.
மெட்ராசை ஆண்ட தாமஸ் மன்றோ போன்ற ஆளுநர்கள், இங்கு வந்து குடியேறிய தாமஸ் பாரி, பெட்ரூஸ் உஸ்கான் போன்ற பெரு வணிகர்கள், பச்சையப்ப முதலியார், சர் பிட்டி தியாகராயர் போன்ற உள்ளூர் பெரிய மனிதர்கள் முதல் சென்னைக்கென பிரத்யேகமான மெட்ராஸ் மொழியை அறிமுகப்படுத்திய சாதாரண ரிக்ஷாக்காரர்கள் வரை எத்தனையோ பேர் சேர்ந்து செதுக்கியதுதான் இன்றைய சென்னை. இந்த நகரம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதல்ல. காலத்தின் தேவை கருதி தன்னைத்தானே விஸ்தரித்துக் கொண்டது.
ஒவ்வொரு சாலைக்கு அடியிலும் ஒரு வரலாறு நிலத்தடி நீராய் ஈரம் மாறாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.சென்னையின் பிரபல சாலைகளான ஹாடோஸ் ரோடும், ஹாரிங்டன் ரோடும் இரண்டு அரசு ஊழியர்களின் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. நுங்கம்பாக்கத்தின் பிரதான சாலையான ஸ்டெர்லிங் ரோடு ஒருகாலத்தில் மாட்டு வண்டிகள் பயணிக்கும் ஒற்றையடி பாதையாக இருந்தது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்த பகுதியில் ஒரு இடத்தை வாங்கினார் ஸ்டெர்லிங் (L. K. Sterling). ஆங்கிலேயப் படையில் சாதாரண சிப்பாயாக சேர்ந்த இவர், படிப்படியாக முன்னேறி செஷன்ஸ் நீதிபதியாகிவிட்டார். அந்த நீதிமானின் நினைவாகத் தான் இன்றும் நீண்டு கிடக்கிறது
ஸ்டெர்லிங் சாலை.ஸ்பென்சர் பிளாசாவுக்கு அருகில், பின்னி நிறுவனத்தின் ஜான் பின்னி வாழ்ந்த வீடு இருந்த தெரு, இன்றும் பின்னி சாலை என்றுதான் அழைக்கப்படுகிறது.ஒருகாலத்தில் சென்னையில் அனைத்து தெருக்களுமே ஆங்கிலேயர்களின் பெயர்களுடன்தான் இருந்தன. பின்னர் இவற்றில் பலவற்றை மாற்றி தமிழ் அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் சமூகப் போராளிகளின் பெயர்களை வைத்தனர். இருப்பினும் இதில் தப்பிப் பிழைத்து இன்றும் தாக்குப் பிடிக்கிறார்கள் சில ஆங்கிலக் கனவான்கள். கொஞ்சம் நின்று நிதானித்துப் பார்த்தால், இதுபோன்ற ஒவ்வொரு பெயர்ப் பலகைக்கு பின்னும் ஒரு கதை கருப்பு வெள்ளையில் ஓடிக் கொண்டிருப்பது தெரியும்.
கால ஓட்டத்தில் எத்தனையோ மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு இன்றும் இளமை மாறாமல் அதே துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சென்னை நகரத்திடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன.
மொத்தத்தில் மூன்று நூற்றாண்டுகளைக் கடந்த இந்த சென்னை மாநகரத்தின் கதை, அனைவருக்குமான ஒரு சிறந்த வாழ்வியல் பாடம்.
மொத்தத்தில் மூன்று நூற்றாண்டுகளைக் கடந்த இந்த சென்னை மாநகரத்தின் கதை, அனைவருக்குமான ஒரு சிறந்த வாழ்வியல் பாடம்.
Source : சென்னையின் கதை