டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 70 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதுவரை மத்திய அரசுடன் நடந்த 11 கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று அரசும், திரும்பப் பெறும் வரை போராட்டம் ஓயாது என விவசாய சங்கத்தினரும் விடாப்பிடியாக உள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்தின் தீவிரத்தை மத்திய அரசுக்கு உணர்த்த குடியரசு தினத்தன்று முறையாக காவல் துறையிடம் அனுமதி பெற்று, டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக்கொடி இறக்கப்பட்டு, சீக்கியர்களின் கொடி ஏற்றப்பட்டது.
ஆனால், செங்கோட்டையில் கொடி ஏற்றியது நாங்கள் அல்ல என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. வன்முறைக்கும், செங்கொட்டையில் கொடி ஏற்றிய விவகாரத்திற்கும் பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்து தான் காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட கலவரத்தில் விவசாயிகள் காவல்துறையினரை கடுமையாக தாக்கியதாக சொல்லப்பட்டது.
ஆனால், காவல் துறை துணை ஆணையர் ஜொகீந்தர் சிங், “எங்களை கடுமையாக தாக்கினார்கள். வாளால் வெட்ட வந்தார்கள். இவை அனைத்தையும் செய்தது விவசாயிகள் அல்ல குண்டர்கள் தான்” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாதங்களுக்கு மேலாக அமைதியாக போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு குடியரசு தின டிராக்டர் பேரணியில் மட்டும் கலவரத்தை ஏற்படுத்த என்ன அவசியம் இருக்கிறது. ஆக, விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க யாரோ முயற்சிப்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
இவை அனைத்திற்கும் உச்சபட்சமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதிகளில் தண்ணீர், மின்சார விநியோகம் போன்ற அடிப்படை வசதிகள் கூட நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகள் அதிக அளவில் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்து கொண்டிருப்பதால், தகவல் தொடர்பை துண்டிக்க இணைய சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
போராடும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழையாமல் இருக்க எல்லைப் பகுதிகளில் கான்கிரீட் பாலங்கள் அமைப்பது, முள்வேலி போடுவது மற்றும் நடந்து வருவதை தவிர்க்க சாலைகளில் கம்பிகளை பதிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் காவல் துறையினர். ஆனால், எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் போராடுவதில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் சோர்வில்லாமல் தொடர்ந்து போராடுவதற்கு அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை தான் காரணம். வீட்டிற்கு ஒரு விவசாயி வீதம் வந்து போராடுவது, பின்னர் அவர்களுக்கு பதிலாக வேறொருவர் வருவது மற்றும் வீட்டில் உள்ள மற்றவர்கள் வயல்களை பார்த்துக் கொள்ளுதல் என திட்டமிட்டு போராடி வருகின்றனர். எத்தனை துன்பங்களை ஏற்படுத்தினாலும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் நடந்தே தீரும் என்று தங்கள் முடிவில் உறுதியாக விவசாயிகள் உள்ளனர்.