மனிஷ் பாண்டே மற்றும் விஜய் சங்கரின் அரை சதத்தால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து இருந்தது
155 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர்,பேரிஸ்டவ் களம் இறங்கினர்.ஆர்ச்சரின் அற்புதமான பந்து வீச்சால் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் பேரிஸ்டவ் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேற,அதனை தொடர்ந்து மனிஷ் பாண்டே மற்றும் விஜய் சங்கர் இணைந்து சிறப்பான பாட்னர் ஷிப் அமைத்து அசத்தினர்.தொடர்ந்து அடித்து ஆடிய மனிஷ் பாண்டே 28 பந்துகளில் 50 ரன்களை கடக்க,15 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து இருந்தது.
ஆர்ச்சர் வீசிய 16 வது ஓவரில் விஜய் சங்கர் ஹாட்ரிக் பௌண்டரி அடித்து அசத்த,ஹைதராபாத் அணிக்கு 24 பந்துகளில் 24 ரன்கள் தேவையாக இருந்தது.அடுத்த ஓவர் வீசிய தியாகி பந்தில் மனிஷ் பாண்டே ஒரு சிக்ஸர் பறக்க விட,ஸ்டோக்ஸ் வீசிய 18 வது ஓவரிலும் ஒரு சிக்ஸரை தெறிக்கவிட்டார்.12 பந்துகளில் 3 ரன்கள் ஹைதராபாத் அணிக்கு தேவை என்ற நிலையில் தியாகி பந்தில் விஜய் சங்கர் ஒரு பௌண்டரி அடித்து இந்த தொடரில் முதல் அரை சதத்தை கடந்து அணியையும் வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
ஹைதராபாத் அணி சார்பில் மனிஷ் பாண்டே 83 ரன்களுடனும்,விஜய் சங்கர் 52 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர் 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.
ஹைதராபாத் அணியின் ரன் வேட்டைக்கு முக்கிய காரணமாய் இருந்த மனிஷ் பாண்டேக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.