சிஎஸ்கே வீரர்கள் அந்த பாணியில் விளையாடி பொழுதை கழிப்பதாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.
அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடர்ந்து, களமிறங்கிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு வாட்சன் 50 ரன்களும், அம்பத்தி ராயுடு 30 ரன்களும் எடுத்து கைகொடுத்தாலும் பின்வரிசையில் வந்த பேட்ஸ்மேன்களின் மிக மோசமான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.
கடைசி நேரத்தில் கேதர் ஜாதவின் மிக மட்டமான ஆட்டம் தான் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். அதே போல் பிராவோ, ஜடேஜா போன்ற வீரர்களுக்கு முன்னதாக கேதர் ஜாதவை களமிறக்கிய சென்னை அணியின் முடிவையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே போல் முன்னாள் வீரர்கள் பலரும் சென்னை அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான விரேந்திர சேவாக்கும் தன் பங்கிற்கு சென்னை அணியை கடுமையாக பேசியுள்ளார்.
இது குறித்து சேவாக் பேசுகையில், ‘168 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கு தான். சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக விளையாடினர். என்னை பொறுத்தவரையில் சென்னை அணியின் சில வீரர்கள் அரசாங்க வேலை பார்ப்பவர்கள் போன்று கடமைக்கு விளையாடி வருகிறார்கள் (வேலை செய்யாவிட்டாலும் சம்பளம் சரியாக வந்துவிடும்)’ என்று தனது பாணியில் சென்னை அணியை கடுமையாக கிண்டலடித்தும் பேசியுள்ளார்.