அரசியல் காரணங்களுக்காகவே ஒரு சிலர் தன்னை எதிர்த்து வருவதாக, கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை தமிழரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான, 800 எனும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இப்படத்திற்கான மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், இலங்கைப் போரில் சிங்கள அரசுக்கு ஆதரவாக முரளிதரன் செயல்பட்டதாகவும், அவரது படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது எனவும் அப்படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இதுதொடர்பாக #shameonyouvijaysethupathi என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகின.
இந்நிலையில், 800 படம் குறித்த சர்ச்சை தொடர்பாக, முத்தையா முரளிதரன் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரானவன் என்பது போல் என்னை சிலர் சித்தரிக்க முயல்கிறார்கள் என முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மலையகத் தமிழனான நான் ஈழத் தமிழர்களுக்காக எண்ணற்ற உதவிகளை செய்துள்ளேன் எனவும்,
2002ம் ஆண்டு எல்டிடிஇ கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்கு சென்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
போர் முடிந்த பிறகு எனது அறக்கட்டளை மூலமாக ஈழத்தமிழ் மக்களுக்கு ஏராளமான உதவிகள் செய்துள்ளதாகவும்,
போர் முடிவுற்றதால் தான் 2009ம் ஆண்டை என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள் என்று கூறினேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நான் கூறியதை தவறாக புரிந்துகொண்டு, தமிழர்களை கொன்று குவித்த நாளை நான் மகிழ்ச்சியான நாளாக கூறியதாக அவதூறு பரப்பப்படுவதாகவும்,
அப்பாவி தமிழ் மக்களின் படுகொலைகளை ஒரு போதும் நான் ஆதரித்தது இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா? எனவும் முரளிதரன் கேள்வி எழுபியுள்ளார்.
எனது சாதனைகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே 800 திரைப்படத்தை எடுக்க சம்மதித்தேன் எனவும்,
திரைப்படத்தை பல்வேறு காரணங்களுக்காக அரசியல் ஆக்குகிறார்கள் என்றும் முரளிதரன் குற்றம்சாட்டியுள்ளார்.