கே.எல்.ராகுல்,சஞ்சு சாம்சன் அதிரடி தொடர்ந்தால் இரு அணிகளில் வெற்றி யார் பக்கம் என்று இரு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
ஷார்ஜா:
9-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஸ்டீவ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் – லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரும், பஞ்சாப் அணி கேப்டனுமான லோகேஷ் ராகுல் பெங்களூரு அணிக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அவர் 69 பந்தில் 132 ரன் எடுத்தார். இந்த தொடரில் சதம் அடித்த ஒரே வீரர் ஆவார். ராகுலின் அதிரடியை ராஜஸ்தான் இன்று சமாளிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் மேக்ஸ்வெல், மயங் அகர்வால் நிக்கோலஸ் பூரன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் முகமது சமி, காட்ரெல், ரவி பிஷ்னோய், முருகன் அஸ்வின் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் அந்த அணியில் உள்ளனர்.
பஞ்சாப் அணி தொடக்க ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் டெல்லியிடம் தோற்றது. 2 வது போட்டியில் 97 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை அபாரமாக வீழ்த்தியது. அந்த அணி இன்று ராஜஸ்தானை வீழ்த்தி 2 வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 16 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது. அந்த அணி இன்று 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.பஞ்சாப் அணியில் ராகுல் எப்படி அதிரடி வீரராக இருக்கிறாரோ அதேபோல ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் அபாரமாக ஆட கூடியவர். அவர் சென்னை அணிக்கு எதிராக 32 பந்தில் 70 ரன்களுக்கு மேல் விளாசினார்.
கேப்டன் ஸ்டீவ் சுமித், டேவிட் மில்லர்,ஆர்ச்சர், ராகுல் திவேதியா போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த பட்லர் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரராக களம் இறங்கலாம். அவரது வருகை ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் பலமாகும்.
இரு அணிகளும் 19 முறை மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் 10 ல், பஞ்சாப் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது .