ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில், டெல்லி அணி 111 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
துபாயில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. காயம் காரணமாக இன்றைய போட்டியிலும் ரோகித் ஷர்மா விளையாடத நிலையில், பொல்லார்ட் கேப்டனாக களமிறங்கினார்.
நடப்பு தொடரில் முதல் அணியாக மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. தொடர்ந்து, இன்றைய போட்டியிலும் வென்று, முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் முனைப்புடன் களமிறங்கியது. மறுபுறம், ஆரம்ப கட்டங்களில் தொடர் வெற்றிகளை குவித்து வந்த டெல்லி அணி, கடைசி 3 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. 7 போட்டிகளில் வென்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வென்று பிளே ஆப்சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் களமிறங்கியது.
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய டெல்லி அணிக்கு, ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. நடப்பு தொடரிக் இரண்டு சதங்களை பதிவு செய்த தவான், தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்றும் டக்-அவுட் ஆகி வெளியேறினார். மீண்டும் அணியில் இடம்பெற்ற பிருத்வி ஷா 10 ரன்களில் நடையை கட்டினார். போல்ட்- பும்ரா வேகத்தில் டெல்லி அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
ஓரளவு தாக்குப்பிடித்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 25 ரன்களையம், பண்ட் 21 ரன்களையும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வந்த வேகத்தில் விக்கெட்டுகளை இழந்தனர். இதன் மூலம் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ரன்களை மட்டுமே எடுத்தது.
மும்பை அணியில் அதிகபட்சமாக பும்ரா மற்றும் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.