ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்று மோதுகின்றன.
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. முதல் லீக் ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இந்த தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. துபாயில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இரு அணிகளும் களம் காண உள்ளன.
இதுவரை ஒருமுறை கூட இறுதி சுற்றுக்கு முன்னேறாத டெல்லி அணி ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலும், ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றா பஞ்சாப் அணி புது கேப்டனான கே.எல். ராகுல் தலைமையிலும், இந்த ஆண்டு களமிறங்குகின்றன.
இரு அணிகளும் இந்த முறையாவது கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
டெல்லி- பஞ்சாப் அணிகள் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் டெல்லி 10 ஆட்டங்களிலும் பஞ்சாப் 14- ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த சீசனில் பஞ்சாப் அணியை வழிநடத்திய அஸ்வின் இம்முறை டெல்லி அணிக்காக களம் காண உள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என கூறப்படுகிறது.
அதிக இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணிக்கி, அனுபவம் வாய்ந்த தொடக்க ஆட்டக்காரரான தவானின் வருகை கூடுதல் பலமாக உள்ளது. மற்றொரு மூத்த வீரரான ரஹானே ஆடும் லெவன்’ல் இருப்பாரா என்பது சந்தேகமாக உள்ளது. பேட்டிங்கிக் இளம் வீரர்களான ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்சர் படேல் உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்கள் அந்த அணியின் பலமாக கருதப்படுகின்றனர்.
பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங் மட்டுமல்லாது கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த இரு சீசனும் பஞ்சாப் அணியில் அதிக ரன் எடுத்த வீரரும் இவர்தான். இவருக்கு பக்கபலமாக நின்று விளையாட மேக்ஸ்வெல், நிகோலஸ் பூரண், மயங்க் அகர்வால், சர்ப்ராஸ் கான் ஆகியோர் உள்ளனர். இவர்கள் டெல்லி அணியின் சுழலில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதில்தான் ஆட்டத்தின் முடிவு உள்ளது.