டெல்லி அணிக்காக விளையாடவிருந்த, பிரபல இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய், ஐ.பி.எல். போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஐ.பி.எல். போட்டி, கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில், வரும் செப்டம்பா் மாதம் 19-ஆம் தேதி முதல் நவம்பா் மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் விளையாடவுள்ள அனைத்து அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்துள்ள நிலையில், அங்கு வீரர்கள் அனைவரும் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தில்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள, பிரபல இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய், தனது சில தனிப்பட்ட காரணங்களுக்காக ஐ.பி.எல். போட்டியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஜேசன் ராய்க்கு பதிலாக, ஆஸ்திரேலிய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டேனியல் சாம்ஸை, தில்லி அணி தேர்வு செய்துள்ளது.ஜேசன் ராயை ரூ. 1.50 கோடிக்கு தில்லி அணி ஏலத்தில் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ், ஐ.பி.எல்.-ல் இருந்து விலகிய நிலையில், தற்போது ஜேசன் ராயும் விலகியுள்ளார். காயம் காரணமாக, பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்தும் ஜேசன் ராய் விலகியுள்ளார்.