சென்னை அணி கடைசி நேரத்தில் ரன் அடிக்காமல் சொதப்ப கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அபு தாபியில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா- சென்னை அணிகள் மோதியது.டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன் பிறகு களமிறங்கிய கொல்கத்தா அணியில் திரிபாதி அதிரடியில் அரைசதத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 168 ரன்கள் இலக்காக வழங்கியது.168 இலக்குடன் சென்னை அணி சார்பில் தொடக்க வீரர்களாக டு பிளிசி,வாட்சன் களம் இறங்கினர்.ஆரம்பம் முதல் நல்ல தொடக்கம் தர,சென்னை அணியின் ஸ்கோர் சீராக நகர்ந்தது.ஓரளவு அடித்து ஆடிய டு பிளிசி(17 ரன்கள்,10 பந்துகள் )மாவி வீசிய 4 வது ஓவரில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.வாட்சனுடன் இணைந்த ராயுடு அவருக்கு பக்கபலமாய் இருக்க,12 ஓவர் முடிவில் சென்னை அணி 99 ரன்கள் பெற்று இருந்தது.நாகர்கோட்டி வீசிய 12.1 வது ஓவரில் ராயுடு கில்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக,12.3 வது பந்தில் சென்னை 100 ரன்களை கடந்தது.
மறுமுனையில் அடித்து ஆடிய வாட்சன் இந்த தொடரில் தனது 2 வது அரை சதத்தை கடந்தார்.நரேன் வீசிய அடுத்த ஓவரில் வாட்சன் 50 ரன்களுடன் நடையைக்கட்ட,யாரும் எதிர்பார்க்காத விதமாக தோனியுடன் இணைந்தார் சாம் கர்ர்ன்.15 ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து இருந்தது.நரேன் வீசிய 16 வது ஓவரில் சாம் கர்ர்ன் அட்டகாசமாய் ஒரு சிக்ஸர் பறக்க விட,அடுத்த பந்தே ஒரு பௌண்டரியை ஓட விட்டார்.வருண் போட்ட அடுத்த ஓவரில் தோனி(11 ரன்கள்,12 பந்துகள்) ஒரு பௌண்டரி அடித்து அடுத்த பந்தே கிளீன் போல்ட் ஆனார்.
ரசல் வீசிய 18 வது ஓவர் முதல் பந்தே சாம் கர்ர்ன்(17 ரன்கள்,11பந்துகள்) மோர்கனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக,சென்னை அணிக்கு 12 பந்துகளில் 36 ரன்கள் தேவையாக இருந்தது.நரேன் வீசிய பந்தில் கேதார் ஜாதவ் ஒரு பௌண்டரி அடிக்க,ஜடேஜாவும் ஒரு பௌண்டரியை ஓட விட்டார்.கடைசி ஓவரில் சென்னைக்கு 26 ரன்கள் தேவையாக இருக்க,ரசல் போட வந்தார்.அந்த ஓவரில் 11 ரன்கள் மட்டுமே ரசல் விட்டுக்கொடுத்து கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்த திரிபாதிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.