தோனியை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னாவும், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருப்பது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, அடுத்த சில நிமிடங்களிலேயே, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக 33 வயதான ரெய்னாவும் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தோனியுடன் விளையாடியதை பெருமையாக கருதுகிறேன். அவர் வழியிலேயே நானும் ஓய்வு பெறுகிறேன். எனக்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். நீண்ட காலமாக சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த சுரேஷ் ரெய்னா தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இது அவரின் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதியாக, கடந்த 2018ம் ஆண்டு இந்திய அணிக்காக ரெய்னா விளையாடி இருந்தார்.
2011 உலகக்கோப்பை தொடர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய போட்டிகளில் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக விளையாடி ரெய்னா வெற்றிகளை பெற்று தந்துள்ளார். குறிப்பாக தோனியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து, இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் பெற்றுக் கொடுத்த வெற்றிகள் ஏராளம். 2015ம் ஆண்டு வரையில், சுரேஷ் ரெய்னா இந்திய அணியின் நிரந்தர வீரராக இருந்தது குறிப்பிடத்தக்கது.