உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கலவரத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள் போராட்டங்கள் நடத்து வருகின்றனர். இந்த போராட்டத்தை உத்திரபிரதேசம் லக்கிம்பூரை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். நேற்று லக்கிம்பூரில் நடந்த நிகழ்ச்சி பங்கேற்க அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக கூறப்பட்டது. இதனால், துணை முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகனின் காருக்கு விவசாயிகள் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது விவசாயிகள் மீது கார் மோதியது.இதில் 2 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.இதனையடுத்து,விவசாயிகள் உயிரிழப்பிற்கு அரசியல் தலைவர்கள்,விவசாயிகள் பலர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரை சேர்ந்த எட்டு விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்,
“உ.பி. விவசாயிகள் போராட்டத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்த நிகழ்வு துயரமளிக்கிறது. கோரிக்கை வைக்கவே உயிரிழக்க வேண்டும் என்ற நிலைமை கொடுமை. அதை வெளியுலகம் அறியக்கூடாது என எண்ணுவது உ.பி. அரசின் மூர்க்கம்”,என்று கடுமையாக சாடியுள்ளார்.