தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசின் நிதிக்காக காத்திராமல், முதற்கட்ட நிதியை ஒதுக்க வேண்டும் என்று முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புயல் பாதிப்பு
கடலூர் மாவட்டத்தில் நேற்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டேன். இன்று திருவாரூர், நாகை மாவட்டங்களில் புரவி புயல் பாதிப்புக்கு ஆளாகியிருப்போருக்கு ஆறுதல் கூறி, அவர்களுடன் பேசினேன்.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் நீர் சூழ்ந்தும், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் உள்ள வேளாண் பயிர்கள் மூழ்கியும்; விவசாயிகளும், மக்களும் துயரத்திலும், சோகத்திலும் மூழ்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மிக மோசமான பாதிப்புகளைப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.
நடவடிக்கை இல்லை
சாலைகள் பல தண்ணீரில் மூழ்கி அடையாளத்தை இழந்திருக்கின்றன. போக்குவரத்தும் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் எல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. ஆனால், இதுவரை அரசுத் தரப்பிலிருந்து உதவிகள் ஏதும் போய்ச் சேரவில்லை என்ற குமுறலை நேரில் கேட்க முடிந்தது. அரசு இயந்திரம் புயல் வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முழு வீச்சில் இறங்கி மீட்புப் பணிகளில் இதுவரை ஈடுபடவில்லை. அமைச்சர்கள் மக்களின் துயரத்தைப் போக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடவில்லை.
மத்திய குழு வருகை
மத்தியக் குழு வெள்ளச் சேதங்களைப் பார்வையிட வந்திருக்கிறது. இது வரை வந்த பல குழுக்கள், நிதி வழங்கப் பரிந்துரைத்தார்கள். ஆனால், தமிழகத்திற்குப் பேரிடர் நிதிகள் வந்ததா என்றால், இல்லை.
பரிதாபமான அந்த நிலை இந்த முறை திரும்பவும் தமிழ்நாட்டுக்கு நிகழக்கூடாது. அதனால் மத்தியக் குழுவிடம் உரிய முறையில் சேதங்களை விளக்கி, நிதி பெறுவதற்கு அ.தி.மு.க. அரசு உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாதிப்பிலிருந்து மக்களைப் பாதி அளவுக்காவது மீட்க முடியும்.
நிதி ஒதுக்க வேண்டும்
எனவே, மத்திய அரசு நிதிக்காகக் காத்திராமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கும முதல்கட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.