மருத்துவ படிப்பில் இளங்கலை, முதுகலை படிப்புகளில் மத்திய அரசுக்கோட்டாவுக்காக ஒதுக்கப்படும் இடங்களில், ஓபிசி மாணவர்களுக்கு இடம் ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செத்துள்ளது.
நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டப்பின், தற்போது மாநிலங்கள் மத்திய தொகுப்பிற்கு 50 சதவீத முதுநிலை, 15 சதவீத இளநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களை ஒதுக்கி வருகிறது.
அதன்படி, அனைத்து மாநிலங்களும் முதுநிலைப் படிப்பிற்காக 7981 இடங்களை மத்திய அரசிற்கு அளித்திருந்தாலும், கடந்த 4 வருடங்களாக தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு அதில் இடம் ஒதுக்கப்படவில்லை.
மத்திய அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு தரப்பட்ட 1378 இடங்களில் மட்டுமே, பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு 27 சதவீத அடிப்படையில் 371 இடங்களும், 10 சதவீத இடஒதுக்கீடு உரிமை பெற்ற முன்னேறிய சமுதாய மாணவர்களுக்கு 653 இடங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதைகண்டித்து, ‘மருத்துவ மேற்படிப்புக் கல்வி ஒழுங்குமுறை 2000’-ன்படி, ‘மருத்துவப் படிப்புக்கான இடங்களில் அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் நடைமுறைப்படுத்தும் இட ஒதுக்கீடு முறையே நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டும் ஏன் ஒதுக்கவில்லை என தமிழகத்தில் உள்ள திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி தீர்மானம் நிறைவேற்றின.
இதுதொடர்பாக, தமிழக அரசு, அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வழக்குத் தொடர்ந்தன. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை இறுதி செய்து அடுத்த கல்வியாண்டு (2021) முதல் அமல்படுத்துவத்துவதற்கு தமிழக அரசு அதிகாரி, மத்திய அரசு அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை நியமித்து உத்தரவிட்டது.
ஆனால், தமிழகத்தால் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 50% இட ஒதுக்கீட்டை தமிழக ஓபிசி மாணவர்களுக்கு நடப்புக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக் கோரி தமிழக அரசு, அதிமுக, திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், இளநிலை மருத்துவ படிப்பு, மருத்துவ மேற்படிப்பு, பல் மருத்துவ படிப்பு, மருத்துவ டிப்ளமோ படிப்பு உள்ளிட்டவற்றில் மாநிலங்களால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. மருத்துவ படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் 27% இடத்தை OBC பிரிவுக்கு மட்டும் ஒதுக்கவேண்டும் என்ற விதி இருந்தும் அதை இதுவரை மத்திய அரசு அமல்படுத்தவில்லை எனவும், அதை நிகழ் கல்வியாண்டிலேயே அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடவும் கோரியது.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, தமிழகத்தால் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு நடப்புக் கல்வி ஆண்டில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? என்பதை மத்திய அரசு தெரிவிக்க கடந்த 13-ம் தேதி உத்தரவிட்டது.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு, அகில இந்தியத் தொகுப்புக்கு தமிழகத்தால் ஒப்படைக்கப்படும் இடங்களில், தமிழக ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு 50% அல்லது 27% என எந்த இட ஒதுக்கீட்டு முறையையும் நடப்புக் கல்வியாண்டில் (2020-2021) அமல்படுத்த முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தது.
ஏற்கெனவே இட ஒதுக்கீட்டை இறுதி செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் 2021-ம் கல்வி ஆண்டு முதல் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மட்டுமே விவாதிக்கப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
அதற்கு, “50% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். அதை அடுத்த கல்வி ஆண்டில் அமல்படுத்துவது தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் குழு தேவையில்லை. மேலும், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உறுதி ஆகிவிட்டதால், அதை நடப்புக் கல்வியாண்டே அமல்படுத்த வேண்டும். எந்தத் தாமதமும் தேவையில்லை” எனத் தமிழக அரசு தெரிவித்தது.
திமுக தரப்பில், “ஏற்கெனவே அகில இந்தியத் தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கு என கடைப்பிடிக்க வேண்டிய இட ஒதுக்கீட்டை மத்திய அரசு முழுமையாகச் செயல்படுத்தவில்லை. எனவே இந்த விவகாரத்தில் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மாநில இட ஒதுக்கீட்டு (69%) முறையை, தமிழகத்தால் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் மருத்துவ இடங்களில் அமல்படுத்த வேண்டும். அதை நடப்புக் கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தது.
அனைத்து தரப்பு வாதங்களையம் கேட்ட நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, தமிழக ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கவும், அதை நடப்புக் கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தவும் கோரிய மேல்முறையீட்டு வழக்கில் இவ்வாண்டு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிட முடியாது என நிராகரித்து, இடைக்கால நிவாரணம் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதனால், நடப்பு கல்வி ஆண்டில் ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு சாத்தியம் ஆகும் என்ற மாணவர்களின் எதிர்பார்ப்பு தகர்ந்துள்ளது. ஏற்கனவே, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருதத்துவ படிப்பில் 7.5% ஒதுக்கீடு செய்வதற்காக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி ஒரு மாதம் காலம் ஆகியும் இதுவரை ஒப்புதல் வழங்கப்படவில்லை. நடப்பாண்டில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில், தொடரும் இந்த கால தாமதத்தால் நூற்றுக்கணக்கான தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு தகர்க்கப்பட்டு வருகிறது என்பதே வேதனை கலந்த உண்மை.