குமரி மலைகளை உடைத்து கேரளாவிற்கு கடத்துவதை கண்டித்து கன்னியாகுமரியின் தக்கலையில் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட யூடியூபர் சாட்டை முருகன், தலைவர்கள் பற்றி அவதூறாக பேசியது பரபரப்பைக் கிளப்பியது. கேரள முதலமைச்சருடன், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை ஒப்பிட்டு பேசியது தமிழக அரசியலில் சர்ச்சையைக் குவித்தது.
இதனைத்தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விஜயநாராயணம் காவல் நிலையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப்புகாரின் அடிப்படையில், நாகர்கோவில் போலீசார் நாங்குநேரி பகுதியில் சாட்டை துரைமுருகனை வைத்து கைது நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். இதனைத்தொடர்ந்து, சாட்டை துரைமுருகனை அக்டோபர் 25ஆம் தேதி வரை சிறையில் அடைக்க பத்மநாபபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சாட்டை துரைமுருகன் சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார், தற்போது சாட்டை துரைமுருகன் இரண்டாவது முறையாக அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து நாம் தமிழர் கட்சி சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தமிழகத்திலிருந்து கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டுசெல்வதைக் கண்டித்து, நேற்று (10-10-2021) கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசியதற்காக தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் ‘சாட்டை துரைமுருகன் அவர்களைக் கைதுசெய்திருக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் போக்கோடு பொய்யாகக் குற்றஞ்சாட்டி, வழக்குப் புனைந்து சிறைப்படுத்தியிருக்கும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான இத்தாக்குதலை ஒருபோதும் ஏற்க முடியாது.
‘சாட்டை’ துரைமுருகனை தற்போதையச் சூழலில் கட்சியை விட்டு நீக்கி, அவரைக் கைவிட்டதுபோல கட்சியின் கடிதத்தாளைப் போலியாக உருவாக்கி, சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருவது மிக இழிவான அரசியலாகும். இத்தருணத்தில், அவர் இவ்வழக்குகளிலிருந்து மீண்டுவரவும், சிறையிலிருந்து வெளிவரவும் நாம் தமிழர் கட்சி அவரோடு முழுமையாகத் துணைநிற்கும் எனத் தெரியப்படுத்துகிறோம் என நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.